எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவா இது? அது எப்போதோ மறைந்துவிட்டது.. தேனியில் கர்ஜித்த ஸ்டாலின்!
எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இப்போது இல்லை, அந்த அதிமுக மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று தேனி திமுக கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தேனி: எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக இப்போது இல்லை, அந்த அதிமுக மறைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று தேனி திமுக கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தேனி வீரப்பாண்டியில் தற்போது திமுக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பல தொண்டர்கள் நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கும், திமுகவிற்கு இடையே உள்ள உறவு குறித்து பேசினார்.
திமுக எப்படி
ஸ்டாலின் தனது பேச்சில், திமுக அண்ணா உருவாக்கிய கட்சி. இது கருணாநிதி வழி நடத்திய கட்சி. அதிமுகவை உருவாக்கிய, நீங்கள் ஏற்றுக்கொண்ட தலைவர் எம்ஜிஆர் கூட திமுகவில் இருந்தவர்தான். இன்றைய அதிமுகவுக்கும் எம்ஜிஆருக்கும் எந்த தொடர்பும் இல்லை. எம்ஜிஆர் நூற்றாண்டு பெயரில் அதிமுகவினர் விளம்பரம் செய்து கொண்டனர்.
கருணாநிதிதான்
கருணாநிதி மீது மிகுந்த மரியாதை கொண்டவர் எம்ஜிஆர். அண்ணாவின் மறைவிற்கு பின் யார் முதல்வராக வேண்டும் என்று குழப்பம் நிலவியது. அப்போதே கருணாநிதிதான் முதல்வராக வேண்டும் என்று எம்ஜிஆர்தான் கூறினார். நான் அண்ணாவாக கருணாநிதியை பார்க்கிறேன் என்று எம்ஜிஆரே கூறினார்.
திமுக பிரிவு
அதன்பின் திமுகவில் இருந்து எம்ஜிஆர் விலகி அதிமுகவை உருவாக்கி ஆட்சிக்கு வந்தார். ஆனால் முதல்வர் ஆன பின் கூட எம்ஜிஆர் நேரடியாக கருணாநிதியை விமர்சித்தது கிடையாது. திமுகவை தவறாக யாராவது பேசினால் கூட அவர் கோபம் அடைவார். சட்டசபையிலேயே அவர் இதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அந்த அதிமுக
அந்த அளவிற்கு அதிமுகவில் அரசியல் நாகரீகம் இருந்தது. அந்த அதிமுகதான் இப்போது மோசமான நிலையை அடைந்துள்ளது. எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவா இது. எம்ஜிஆருக்கும் தற்போது இருக்கும் அதிமுகவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அப்படி இருந்திருந்தால் அதிமுகவை விட்டு தங்க தமிழ்ச்செல்வன் கண்டிப்பாக வெளியே வந்திருக்க மாட்டார்.
என்ன செய்தார்கள்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பெயரில் ஜெயலலிதா, எம்ஜிஆர் பற்றி பேசாமல், சிலர் தங்களை மட்டும் விளம்பரம் செய்து கொண்டனர். ஓபிஎஸ், இபிஎஸ் எல்லாம் தங்கள் விளம்பரத்திற்காக அதிமுகவை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோருக்கு இழைத்த துரோகம் அது, என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.