'தயவு செய்து எழுந்திருமா', விபத்தில் பலியான மனைவியின் சடலத்துடன் நடுரோட்டில் கணவர் பாச போராட்டம்
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் மீது அரசு பேருந்து, ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். உயிரிழந்த மனைவியின், சடலத்துடன் கணவர் நடத்திய பாசப் போராட்டம் காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.
தேனி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி ராஜலட்சுமி. வீட்டில் நடக்கவுள்ள நிகழ்வு ஒன்றுக்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கள முடிவு செய்திருந்தனர்.
இதற்காக பழனிசெட்டிபட்டியில் இருந்து தேனி வழியாக பெரியகுளம் நோக்கி சென்றார்கள். பெரியகுளம் அருகே கைலாசபட்டி என்ற கிராமத்தில் ஜெயராமன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியகுளம் நோக்கி வந்த அரசு பேருந்து, ஜெயராமனின் வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்தனர்.
தலைநசுங்கி பலி
அப்போது, ராஜலட்சுமி அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். பேருந்து டயர் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ராஜலட்சுமி பரிதாபமாக இறந்துபோனார்.. தன் கண் முன்னரே மனைவி ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடப்பதை கண்ட ஜெயராமன் கண்ணீர் விட்டு துடித்தார்.
உடலை பார்த்து அழுதார்
மனைவியின் உடலை தன் மடியில் கிடத்திக் கொண்டு , 'தயவு செய்து எழுந்திருமா' என்று ஜெயராமன் கதறி அழுதது காண்போரை கண் கலங்க வைத்தது. பத்திரிக்கை யாருக்கு வைக்கப்போனார்களோ அவர்களும் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்து ராஜலட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
போலீசில் சரண்
இதற்கிடையே, அரசு பேருந்தின் ஓட்டுநர் பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். தென்கரை போலீஸார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்து நடந்த கைலாசப்பட்டி பிரிவு மிகவும் அதிகமாக விபத்து நடந்து வரும் பகுதியாகும். அங்கு ஏற்கனவே நான்கு இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து எச்சரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டித்தான் அங்கு விபத்து நடந்துள்ளது.
தாய் மகன் பலி
இதனிடையே தேனியில் மற்றொரு விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்தனர். போடி ராசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி முருகேஸ்வரி. முருகேஸ்வரி தனது மகன் பூபதிராஜாவுடன் இரு சக்கர வாகனத்தில் ராசிங்காபுரத்தில் இருந்து தேனி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பழனி செட்டியபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது பின்னால் வேகமாக வந்த போர்வெல் லாரி ஏறியதில் பூபதிராஜா சம்பவ இடத்திலும், முருகேஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமலும் உயிரிழந்தனர்.