தேனியில் காதல் தம்பதிக்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் நிதியுதவி... தழைத்தோங்கும் மனிதநேயம்
தேனி: ஊரடங்கால் வேலைக்கு செல்லமுடியாமல் மருத்துவச் செலவுக்கு சிரமப்பட்ட காதல் ஜோடி ஒன்றுக்கு நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தினர் ரூ.5,000 நிதியுதவி வழங்கினர்.
தென்காசியை சேர்ந்த அமீன் என்பவர் கன்சுலா பீவி என்பவரை சில மாதங்களுக்கு முன்பு காதலித்து கரம்பிடித்தார். இதற்கு அவர்களது குடும்பத்தினர் மத்தியில் ஆதரவு இல்லாத காரணத்தால், சொந்த ஊரை விட்டு தேனிக்கு கடந்த ஜனவரி மாதம் அவர்கள் குடியேறியுள்ளனர். அங்குள்ள நிறுவனம் ஒன்றில் அமீன் வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்த ஒரு மாதமாக வருமானமின்றி மனைவியின் மருத்துவச் செலவுக்கு கூட சிரமப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவலறிந்த நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தினர் இந்த தகவலை மன்றத்தின் செயலாளர் மூலம் விஜய்க்கு கொண்டு சென்றுள்ளனர். அவரும் அந்த தம்பதிக்கு தேவையான உதவிகளை செய்துகொடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால் உணவு உள்ளிட்ட மற்ற தேவைகளுக்காக எந்த உதவியும் வேண்டாம் என்றும் மருத்துவச் செலவுக்கு மட்டும் உதவினால் தங்களுக்கு போதுமானது எனவும் அமீன் கூறியிருக்கிறார்.
இதையடுத்து தேனி மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பாக அமீன் -கன்சுலா தம்பதிக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், இதேபோல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சிரமப்படும் குடும்பங்களுக்கு விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தங்களால் இயன்ற பொருளுதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் ரசிகர்களின் இந்த மனிதநேயமிக்க செயல் பொதுமக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு பெற்றுள்ளது.