தேனியில் வாக்கு இயந்திரங்களை மாற்றியதாக பரபரப்பு.. திமுக, காங். அமமுகவினர் முற்றுகையால் பதற்றம்
தேனி: தேனியில் வாக்கு இயந்திரங்களை மாற்றியதாக கூறி திமுக, காங்கிரஸ், அமமுக கட்சிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவுகிறது.
தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
தேனி உள்பட 39 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. வாக்கு எந்திரங்கள் தேனியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுரை மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு எந்திரங்கள் தேனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட்து. இடப்பற்றாக்குறை காரணமாக இடம் மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே தேர்தல் அதிகாரியின் விளக்கத்தை ஏற்க மறுத்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு அமமுக கட்சிகள் தேனி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த போராட்டதால் தேனியில் இரவில் பதற்றம் நிலவியது.
இதனிடையே தேர்தல் அதிகாரியின் விளக்கத்தை ஏற்க மறுத்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, வாக்கு எண்ணாதபோது வாக்கு எந்திரத்தை மாற்றுவது சட்ட விரோதம் என்று தெரிவித்துள்ளார்..மேலும், தேனியின் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தை பூட்டி சாவியை உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.