குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை... துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி
தேனி: தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில், ஆட்சியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தேனியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மின் தடை ஏற்படும் சமயங்களில் கணினி மயமாக்கல் மூலம் மின் தடையை நீக்கும் கருவியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: மின் தடை ஏற்படும் சமயங்களில் 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொண்டு எந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது என்பதை மக்கள் தெரிவித்தால் அந்த விபரம் கணினியில் பதிவு செய்து கொள்ளப்படும்.
பின்னர் சம்மந்தப்பட்ட இடத்துக்கு மின் வாரிய ஊழியர்கள் வந்து அதனை சரி செய்வார்கள். 25 கோடியே 52 ஆயிரத்து 371 ரூபாய் மதிப்பில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை போக்க அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. முதற்கட்டமாக குடிமராமத்து பணி செய்ய ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் குடிநீர் தட்டுப்பாடு நிலவரம் குறித்து அறிக்கை கேட்டுள்ளோம்.அதன் அடிப்படையில் எந்தெந்த மாவட்டத்துக்கு முன்னுரிமை அளித்து எவ்வளவு தொகை ஒதுக்கப்படும் என ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கி குடிநீர் தட்டுப்பாடு சீரமைக்கப்படும் என்றும் கூறினார்.
இதனிடையே, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று அமமுக கட்சியிலிருந்து விலகிய தேனி மாவட்ட நிர்வாகிகள் என்னை நேரில் சந்தித்து, கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம், தமிழக அரசின் ஒப்புதலை கர்நாடகா பெற வேண்டிய அவசியம் இல்லாமல் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என டெல்லியில் ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி மனு அளித்துள்ள நிலையில், காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லிக்கு சென்று நேரில் வலியுறுத்தி உள்ளார்.