மகிழ்ச்சியை ஏற்படுத்திய மழை... முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தேனி: முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தேனி மாவட்ட பகுதியில் சாரல் மழை தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாராமாக வைகை அணை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லாததால் வைகை அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று போய் இருந்தது.
கடந்த 4 வாரங்களாக வைகை அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வரும் சூழலில், மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது, வைகை அணையின் நீர்மட்டம் 33.46 அடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 60 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்தாண்டு ஜுன் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய, தென்மேற்கு பருவமழை காலம் கடந்து, 8 ம் தேதி தொடங்கியது. இந்தநிலையில், கூடலூர், லோயர்கேம்ப், குமுளி, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.
நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அதன் தாக்கமாக தமிழக எல்லைப் பகுதிகளில் சாரல் மழை தொடங்கி உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்து உள்ளனர்.
சென்னை மக்களே குட் நியூஸ்.. கொண்டாடுங்க.. வீக் என்ட்ல மழை இருக்காம்!
பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.25 அடி. அணைக்கு 231 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும், முதல்போக சாகுபடிக்காக ஜூன்மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால் தாமதமாக தண்ணீர் திறந்தாலும், அதனை பயன்படுத்தி சாகுபடி செய்ய விவசாய நிலங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இதற்கிடையே, மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா முல்லைபெரியாறு - வைகை அணை தண்ணீரை நம்பியுள்ள கடைமடை பகுதி. இங்குள்ள கொட்டாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளது. இதனால் தங்கள் பகுதிக்கும், பெரியாறு பாசன கால்வாய் அமைத்துத்தர வலியுறுத்தி உள்ளனர்.