நம்பினாலும்.. நம்பாவிட்டாலும் இதுதான் நிஜம்.. வட மாநிலத்தவர் இல்லாததால் தொழில்கள் முடங்கிய பின்னணி
தேனி: தேனியில் கூட பாஸ்ட்புட் கடைகளில் நூடூல்ஸ் மற்றும் பிரைடு ரைஸ் போடுவது அஸ்ஸாம்கார்கள் தான்.. வேலைக்கு ஆள் இல்லாமல் கடைகள் . நிறுவனங்கள், மில்கள் சிறிய நகரங்களில் கூட அல்லாடுகின்றன. தமிழகத்தில் தொழில்கள் அனைத்திலும் வடமாநிலத்தவர் நீக்கமற நிறைந்து இருந்தனர். கொரோனாவால் ஊருக்கு சென்றுவிட்டதால் இப்போது தொழில்துறை முடங்கி உள்ளது.
தமிழகத்தின் கேரள எல்லையில் உள்ள கடைக்கோடி மாவட்டங்களில் ஒன்று தேனி. இங்கு விவசாயமே பிரதானம். இதைதவிர ஒரு சில நூற்பாலைகள், தறி மில்கள் உள்ளன. மற்றபடி காய்கறி ஏற்றுமதி, ஏலக்காய் ஏற்றுமதி, வெள்ளைப்பூண்டு ஏற்றுமதி, திராட்டை ஏற்றுமதி உள்ளிட்வைதான் பிரதான தொழிலாக உள்ளது.
இந்நிலையில தேனிமாவட்டத்திலும் பல்வேறு பாஸ்ட்புட் கடைகள், உணவங்களில் அஸ்ஸாம் மாநிலத்தவர் மற்றும் ஒடிசா, பீகார் மாநிலத்தவரே பணியாற்றி வந்தனர். இப்போது அவர்கள் ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் கடைகளில் இருந்து சொந்த ஊர் சென்றுவிட்டனர். இதேபோல் இருக்கும் ஒரு சில மில்களில் பணியாற்றி வந்த வடமாநிலத்தவர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் அந்த தொழில் நிறுவனங்கள் எல்லாம் இயங்க முடியாமல் முடங்கி கிடக்கின்றன.
திருச்சி கொரோன வார்டில் இருந்து 6 பேர் டிஸ்சார்ஜ்.. இதுவரை 77 பேரை குணப்படுத்தி அசத்தல்
ஏன் விரும்புகிறார்கள்
விவசாயமே பிரதான தொழிலாக உள்ள தேனியே இந்த நிலை என்றால் கோவை, திருப்பூர், சென்னை, ஈரோடு, திருச்சி, மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், சிவகாசி உள்ளிட்ட தொழில் நகரங்களில் நிலைமை மிக மோசம். அங்கு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில், ஓட்டல்களில் பிராதனமாக இருந்தது வடமாநித்தவர் தான். மிக குறைவான கூலி. எதிர்த்து பேசாத தன்மை. நேரம் காலம் பார்க்காமல் கடின உழைப்பு, அடிக்கடி விடுமுறை எடுக்காதது, வேறு நிறுவனங்களுக்கு மாறாமல் விசுவாசமாக வேலைபார்ப்பது போன்ற காரணத்தால் உள்ளூர் பணியாளர்களை விட வடமாநிலத்தவரை தொழில் அதிபர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
உணவகங்கள்
கட்டிட தொழில் தொடங்கி, நூற்பாலைகள், நெசுவு ஆலைகள், செங்க சூளைகள், ஓட்டல்கள் உள்பட பல்வேறு பணிகளில் வடமாநிலத்தவர் தான் பிரதானமாக இருக்கிறார்கள். அடிப்படை சம்பளம் தரக்கூடிய இந்த பணிகளை உள்ளூர் மக்கள் அதிகம் விரும்புவதில்லை. இதுவே வடமாநிலத்தவர் அதிகமாக இப்பணிகளை ஆக்கிரமிக்க முக்கியமாக காரணமாகி உள்ளது. கோவை திருப்பூரில் வட மாநிலத்தவர் எண்ணிக்கை பல லட்சங்களை கடந்து உள்ளது. இந்த இரு ஊர்களிலும் பல ஆயிரம் தொழில் நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு வடமாநிலத்தவரே பல்வேறு பணிகளை செய்து வந்தனர். இப்போது அவர்கள் போய்விட்டதால் லாக்டவுன் முடிந்தும் தொழில்களை நடத்த முடியாமல் தவிக்கிறார்கள்.
கமிஷன் தர தயார்
திரும்பி போனவர்களை விமானத்தில் அழைத்து வந்த பணியாற்ற வைக்கவும் சிலர் தயாராக உள்ளனர். தங்களிடம் வேலை பார்த்த பலரை மீண்டும் எப்படியாவது அழைத்து வர வேண்டும் என்பதில் தொழில் அதிபர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர். மேலும் வடமாநிலத்தவரை வேலைக்கு அழைத்து வருபவர்களுக்கு பலர் கமிஷன் அளிக்கவும் தயாராக உள்ளனர்.
அடிக்கடி விடுமுறை
இதில் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நம்மூர் தொழிலாளர்கள் பலர் பணிகளில் போதிய ஆர்வம் காட்டாமல் குடிக்கு அடிமையாகி இருப்பது முக்கிய காரணம். ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மது அருந்திவிட்டு அடுத்த நாள் திங்கள்கிழமை வேலைக்கு வர மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பல இடங்களில் உள்ளது. அடிக்கடி விடுமுறை எடுக்கிறார்கள். ஆர்டர்களை முடித்துக்கொடுக்க வேண்டிய நேரத்தில் திடீரென வேலையை விட்டு வேறு இடங்களுக்கு தாவுவது, நேரத்திற்கு வேலைக்கு வராமல் இருப்பது, வேலையை சரிவர செய்யாமல் மெதுவாக இயங்குவது போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளது.
தொழிலாளர்கள் இல்லை
அதேநேரம் திறமையான ஊழியர்களுக்கு சென்ற இடம் எல்லாம் மதிப்பு என்ற வகையில் நன்றாக வேலை செய்யக்கூடிய நம்மூர் தொழிலாளர்களுக்கு தொழில் நிறுவனங்களில் மிகப்பெரிய அளவில் டிமாண்ட் உள்ளது. ஏன் தட்டுப்பாடு உள்ளது என்றே சொல்லலாம். அவர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாராக உள்ளன.ஆனால் தொழில் திறமை உள்ளவர்கள் தான் அந்த அளவிற்கு இல்லை என்கிறார்கள் தொழில் நடத்துபவர்கள். அதாவது தமிழகத்தில் தொழில்கள் அதிகம். வேலை வாய்ப்பும் மிக அதிகம். ஆனால் அதற்கு தொழிலாளர்கள் போதிய அளவில் இல்லை என்பதே கள எதார்த்தம்.