மதுபோதையில் பிரியாணி சாப்பிட்டு பலியான பாண்டியன் - புதைத்த உடலை தோண்டியெடுத்த மனைவி
ஆண்டிபட்டி அருகே கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார், புதைக்கப்பட்ட சில மணி நேரங்களில் கணவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிபட்டி: மது சாப்பிட்டு விட்டு மனைவி சமைத்து கொடுத்த பிரியாணியை சாப்பிட்ட நபர் மரணமடைந்த சம்பவம் ஆண்டிபட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி புதைத்த உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்துள்ளார் மனைவி.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன், 29. இவர் தனது மனைவி லதா,28 மற்றும் கருப்பசாமி 5, ரோகித் 4 கருப்பம்மா ஆகிய 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பாண்டியன் அவரது சகோதரர்களான ஜோதிலட்சுமணன் 31, ரமேஷ்35 மற்றும் முனீஸ்வரன் 33 ஆகியோருடன் சேர்ந்து கடந்த மூன்று நாட்களாக மது அருந்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த பாண்டியன் தனது மனைவி சமைத்து கொடுத்த பிரியாணியை சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் வயிற்று வலி ஏற்படவே சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலே பாண்டியன் உயரிழந்ததாகக் கூறியுள்ளனர்.
இதனையடுத்து சொந்த ஊருக்கு அவரது உடலை எடுத்துச் சென்றுள்ளனர். மேக்கிழார்பட்டியில் கோவில் திருவிழா நடைபெறுவதால் பாண்டியன் உடலை உடனடியாக அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில் இறந்த பாண்டியனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது மனைவி லதா காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆண்டிபட்டி காவல்துறையினர், தேனி மாவட்ட காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் சுருளிராஜ், ஆண்டிபட்டி வருவாய் வட்டாட்சியர் பாலசண்முகம், ஆண்டிபட்டி துணைக்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்து மீண்டும் புதைக்கப்பட்டது.
இது சம்பந்தமாக இறந்தவரின் சகோதரர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.