மாமியார் வீட்டில் அரளி விதையை அரைத்து சாப்பிட்ட லாவண்யா.. அம்மா வீட்டில் உயிரை விட்டார்.. தேனி ஷாக்
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்
தேனி: மாமியார் வீட்டில் அரளிக்கொட்டையை அரைத்து சாப்பிட்ட லாவண்யா, அம்மா வீட்டில் வந்து மயங்கி விழுந்து உயிரை விட்டார்.. கல்யாணம் ஆகி 4 வருடங்களே ஆன நிலையில், மாமியார் வீட்டில் வரதட்சணை பிரச்சனையால், அடி, உதை தாங்க முடியாத இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தேனியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ளது பல்லவராயன்பட்டி என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் தம்பதி முருகன் - கண்ணகி.. இவர்களுக்கு ராஜேஷ் என்ற மகனும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.
முருகன் கேரளாவில் உள்ள ஏல தோட்டத்தில் கூலி வேலை செய்கிறார். அதனால் மனைவியும், மகனும் இதே தொழிலை செய்து வருகின்றனர். லாவண்யாவுக்கு அதே ஊரை சேர்ந்த சதீஷ் என்பவருடன் திருமணமாகி உள்ளது.. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறான்.
இந்நிலையில், சதீஷ் வீட்டில் வரதட்சணை கேட்டு லாவண்யாவை கொடுமைப்படுத்தி உள்ளனர்.. 30 பவுன் நகை மற்றும் சீர்வரிசை தரப்பட்ட நிலையில், மேலும் நகை, பணம் வாங்கி வர சொல்லி அம்மா வீட்டுக்கு துரத்தி இருக்கிறார்கள்.. ஒவ்வொரு முறையும் சித்ரவதைக்கு ஆளான லாவண்யா தன் பெற்றோரிடம் சொல்லி கதறி அழுதுள்ளார்... லாவண்யாவின் பெற்றோருக்கு கேரளாவில் சொந்தமாக ஏழு தோட்டம் இருப்பதால் அதில் இருந்து பங்கு வாங்கி வரச்சொல்லி அடித்து உதைத்துள்ளனர்.
மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான லாவண்யா, தற்கொலை செய்வதே மேல் என்று முடிவுக்கு வந்து, வீட்டருகே இருந்த அரளிக்கொட்டையை அரைத்து சாப்பிட்டுவிட்டு அம்மா வீட்டுக்கு வந்தார்.. மகள் சோர்வுடன் இருப்பதை கண்ட பெற்றோர் என்ன ஏதென்று விசாரிக்கவும் லாவண்யா எதுவுமே சொல்லவில்லை.. சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.. இதை பார்த்து பதறிய பெற்றோர் அவரை உடனடியாக கோம்பை ஆஸ்பத்திரிக்கும், பிறகு மேல் மேல்சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அழைத்து சென்றனர்.. ஆனால் லாவண்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்..
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், சதீஷ் வீட்டினரிடம் இதை பற்றி கேட்கவும், அவர்கள் அலட்சியமாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக தெரிகிறது. அதனால், லாவண்யாவின் பெற்றோர். கோம்பை ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.. இதையடுத்து, சதீஷ், அவரது அம்மா ராணி, அப்பா கோட்டைச்சாமி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
எனினும் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக லாவண்யாவின் பெற்றோர் உத்தமபாளையம் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்... இப்போது லாவண்யாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. கல்யாணம் ஆகி 4 வருடங்களே ஆவதால், உத்தமபாளையம் ஆர்டிஓ விசாரணையும் நடந்து வருகிறது.