முளைப்பாரி திருவிழாவில் இரு தரப்பு மோதல்.. பாட்டி மண்டை உடைந்தது.. சங்கரன்கோவிலில்!
கோயில் திருவிழாவில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டதில் 5 பேர் கைதானார்கள்.
நெல்லை: கோயில் திருவிழாவில் இரு தரப்பினரும் மோதிக் கொண்ட விவகாரத்தில் பாட்டி ஒருவரின் மண்டை உடைந்தது. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலைமறியல் நடைபெற்ற சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ளது வடக்குப் புதூர் கிராமம். இங்கு முத்துமாரியம்மன் கோயில் விழாவின் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது திடீரென்று ஒரு பிரிவினர் மீது மற்றொரு பிரிவினர் கல்வீசி தாக்க ஆரம்பித்தனர். இது கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கோஷ்டி மோதலாக உருவானது.
மண்டை உடைந்தது
இந்த மோதலில் இருளியம்மாள் என்ற பாட்டிக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
5 பேர் கைது
பாட்டி மண்டை உடைந்து காயமானதால், ஒரு தரப்பினர் மேலும் ஆத்திரமுற்றனர். இதனால் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துவிட்டனர். இரு தரப்பை சேர்ந்த 20 பேர் மீது கேஸ் போட்டு, அதில் 5 பேரை உடனடியாக கைது செய்தனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
இதனால் ஆத்திரம் அடைந்த இன்னொரு பிரிவினர், கைதான தங்கள் தரப்பு ஆட்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்லி முத்துமாரியம்மன் கோவில் முன்பே மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
போலீசார் குவிப்பு
ஆனால் இன்னமும் வடக்குப் புதூர் கிராமத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.