இடி மின்னலுடன் கூடிய கனமழையால் கூத்தன்குளம் சரணாலயத்தில் 300 பறவைகள் உயிரிழப்பு
திருநெல்வேலி: இடி மின்னலுடன் கூடிய கனமழையால் திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குளம் சரணாலயத்தில் 300க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
திருநெல்வேலி, மதுரை, தேனி, கன்னியாகுமரி உள்பட தென்மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இன்று(திங்கள்கிழமை) இரவு நெல்லை மாவட்டம், மதுரை மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது.
குறிப்பாக நெல்லை மாவட்டம் வள்ளியூர், நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இந்த இடி மின்னலுடன் கூடிய மழை காரணமாக கூத்தன்குளம் சரணாலயத்தில் 300க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்துள்ளன. தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்துவருகிறது.