4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பே முதல் வெற்றி… ஸ்டாலின் பேச்சு
தென்காசி: 18 தொகுதி இடைத்தேர்தலோடு, 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது திமுகவுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்காசி தொகுதி மக்களவை வேட்பாளர் தனுஷ் குமாரை ஆதரித்து சங்கரன்கோவிலில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
40-க்கு 40
அப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 வெல்வதோடு, சட்டமன்ற இடைத்தேர்தலில் 22-க்கு 22-ஐயும் வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று, பெரும்பான்மை பலம் பெற்று விடக் கூடாது என்பதற்காகவே நான்கு தொகுதிகளுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையத்துடன் கைகோர்த்து மத்திய, மாநில அரசுகள் நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம் சாட்டினார்.
முதல் வெற்றி
ஆனால், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதால் தற்போது 22 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்றும் இதுவே திமுகவுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும் ஸ்டாலின் பேசினார். மத்தியில் மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட்ட உடனே, தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்றார்.
இந்து விரோத கட்சியா?
தி.மு.க இந்து விரோத கட்சி என முத்திரை குத்த பா.ஜ.க முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய மு.க. ஸ்டாலின், சமூக நல்லிணக்கத்தை பேணி காப்பதே தி.மு.கவின் தலையாய கடமை எனவும் கூறினார்.
ஏழைத் தாயின் மகன்
ஏழைத் தாயின் மகன், ஏழை மக்களுக்காக என்ன செய்தார் என்று்ம ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மோடி ஆட்சியில் பொருளாதாரம் உயரவில்லை என்றும் ஏழைத் தாயின் மகன் விலைவாசியை உயர்த்திவிட்டதாக குற்றம் சாட்டினார்.