400அடி பள்ளம்.. 8நாள் போராட்டம் -நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 6வது நபர் மீட்பு - நடந்தது என்ன?
நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், 8வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்த நிலையில் பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் 6வது நபரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே அடை மிதிப்பான் குளத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி அமைந்துள்ளது.
இங்கு கடந்த 14 ஆம் தேதி இரவு 400 அடி ஆழத்தில் கற்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது ராட்சத பாறை உருண்டு விழுந்தது.
விநாயகர் ஊர்வலம், பல்லக்கு தூக்க அனுமதி... ஈழத்தமிழர் நினைவேந்தலுக்கு தடையா? - திருமுருகன் காந்தி
இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள்
இதில் பொக்லைன் மற்றும் லாரி டிரைவர்களான நாங்குநேரி அருகே உள்ள காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), தச்சநல்லூர் ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் (35), இளையநயினார் குளத்தைச் சேர்ந்த செல்வம் (27), விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளம் பகுதியை சேர்ந்த விஜய் (27), பொக்லைன் கிளீனர் ஆயன்குளத்தைச் சேர்ந்த மற்றொரு முருகன் (23) ஆகிய 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
தொழிலாளர்கள் மீட்பு
அப்போது இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன், நாட்டார்குளத்தை சேர்ந்த விஜய் ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். பாறை சரிவில் சிக்கிய காக்கைகுளத்தை சேர்ந்த செல்வகுமார் மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆயன்குளத்தை சேர்ந்த மற்றொரு முருகனின் உடலும் சமீபத்தில் மீட்கப்பட்டது.
6 வது நபர் ராஜேந்திரன்
இந்நிலையில் ஆறாவது நபரான ஓட்டுனர் ராஜேந்திரனை மீட்கும் பணி 3 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. துர்நாற்றம் வீசும் இடங்களில் தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பாறைக்கு அடியில் துர்நாற்றம் வீசுவது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அந்தப் பாறையை வெடிவைத்து தகர்த்து உடலை மீட்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டது எப்படி?
சுமார் 400 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 30 பேர் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் பாறையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் துவாரங்கள் போடப்பட்டு அதில் வெடி மருந்துகள் செலுத்தப்பட்டது. ஒரு கிலோவிற்கும் அதிகமான வெடி மருந்து பாறையில் வைக்கப்பட்டு தகர்க்கப்பட்டது. தொடர் போராட்டங்களுக்கு பின்னர் இன்று 6 வது நபரான ராஜேந்திரன் உடல் மீட்கப்பட்டது. இதன் மூலம் 8 நாட்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணி நிறைவடைந்தது.