75 வது மாசி மகத் திருவிழா... செங்கோட்டையில் பலத்த பாதுகாப்புடன் பால்குட ஊர்வலம்
நெல்லை : நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 75 வது மாசிமகத் திருவிழா பால்குட ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்றது.
செங்கோட்டையில் ஆண்டுதோறும் வர்த்தக சங்கம் சார்பில் மாசிமகத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, தாலுகா அலுவலகம் முன்புள்ள வீரசைவ சுந்தர விநாயகர் ஆலயத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க பால்குடம் ஊர்வலம் புறப்படும்.
கே.சி.ரோடு,சேர்வைக்காரன் புதுத்தெரு வழியாக வீர கேரள விநாயகர் கோவில், முப்புடாதியம்மன் கோவில் பகுதியாக வந்து செங்கோட்டை அருள்மிகு குலசேகரநாதர் அன்னை அறம் வளர்த்த நாயகி தர்மஸம், வர்த்தினி ஆலயத்தில் பால்குட ஊர்வலம் முடிவடையும்.
பின்னர், 12 மணிக்கு உச்சிகால பூஜையும், அன்னதானமும் நடப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் உருவான அசம்பாவிதங்களைத் தொடர்ந்து இன்று நடைப்பெற்ற மாசிமக பால்குட ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.
நெல்லை ஏ.டி.எஸ்.பி தனபாலன்,தென்காசி காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் பொறுப்பு சக்திவேல்,செங்கோட்டை, தென்காசி காவல்துறை ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், ஆடிவேல் மற்றும் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்போடு, பல கட்டுப்பாடுகளுடன் 75 வது மாசிமகத் திருவிழா பால்குட ஊர்வலம் நடைப்பெற்றது.