ஊர் திருவிழாவில் மேடை நாடகம்...ரசித்து வியந்த மக்கள்.. தென்காசி இளைஞர் குழு சூப்பர் முயற்சி
தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசி அருகில் அய்யாபுரம் என்னும் கிராமத்தில் நடந்த ஊர் திருவிழாவில் மேடை நாடகம் சிறப்பாக நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகில் அய்யாபுரம் என்னும் கிராமத்தில் தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோவில் உள்ளது,
அங்கு சித்திரை மாதத்தில் ஐந்துநாள் கொடை விழாவாக அம்மனுக்கு மிகவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். வெளியூர் மற்றும் தென்காசியை சுற்றியுள்ள மக்கள் திரளாக வந்து திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.
முப்புடாதி அம்மன்
திருவிழாவின் முக்கிய அங்கமாக ஐந்து நாளும் ஐந்து விதமான அலங்கரித்த சப்பரத்தில் முப்புடாதி அம்மன் ஊரைச் சுற்றி பவனி வரும்.அந்நிகழ்வுக்கு முன்னதாக தமிழர் பாரம்பரிய நிகழ்ச்சியான கரகாட்டம், கும்பாட்டம், கோலாட்டம் போன்றவை வழக்கமாக நடைபெறும்.
மேடை நாடகங்கள்
மேடை நாடகத்திற்கு பெயர் போன இந்த அய்யாபுரத்தில் 1970,80களீல் மேடைநாடகம் ஊர் மக்களால் ஏற்று சிறப்பாக நடைபெற்று வந்தது, 1970களில் நாடக மேடையை அங்கு தோற்றுவித்து வரலாற்று காவியங்களை நடத்தியவர் ஐயா ஆ. கந்தசுவாமி ஆவார். அதன் பின் தொடர்ந்து பலர் மேடை ஏறத் தொடங்கினர்.
1970 இறுதியில் "மின்னொளி", "கொடிவீரன்" போன்ற பல நாடகங்கள் வந்த போதிலும் 1980 காலகட்டத்தில் பச்சையப்பன் கல்லூரின் முன்னாள் முதல்வர், பேராசிரியர் மு பி பாலசுப்ரமணியன் தனது இளமை பருவத்தில் எழுதி நடித்த "மனமல்லி", "மலர்க்கொடி" போன்ற காதல் நாடகங்கள் அன்றைய இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது,
90களில் சினிமா மோகம்
அதனை தொடர்ந்து 90களில்முத்துக்குமரன், மாஸ்டர்மாரிமுத்து போன்றவர்கள் பலர் காதலையும் சமூக அக்கறைகளையும் பல பரிமாணங்களிலும் மேடையேற்றினார். 90களுக்கு மேல் சினிமாவின் அதீத வரவுகளின் வருகையாலும் திருவிழாக்களில் திரை கட்டி படம் போடுவதாளும் மக்களுக்கு நாடகம் மேல் ஈர்ப்பு குறைய தொடங்கியது.
சில நாடங்கள்
2000க்கு மேல் மிக சொற்ப நாடகமே அரங்கேறியது அத்திருவிழாக்களில், 2008-2009ல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் மேலாளர் திரு இசக்கிமுத்து எழுதி இதய தென்றல் நண்பர்கள் குழு நடித்த "போராட்டமே வாழ்க்கை" மற்றும் "முன்னேற்றம்"ஆகிய நாடகங்கள் மேடையேறியதே கடைசி ஆகும்.
நாடகங்கள்
அதன் பின்னர் 10ஆண்டுகள் கழித்து தற்பொழுது இளைஞர்கள் மற்றும் நாட்டாமைகளின் முயற்சியால் இந்தாண்டு ஐயப்பன் என்பவரின் கதை வண்ணத்தில் இந்தாண்டு "எங்கள் ஊர் அய்யாபுரம்" என்னும் இந்த நாடகம் நேற்று (மே 4) மாலை அய்யாபுரம் கோவில் முன்பு சிறப்பாக நடந்தது.
நடித்த இளைஞர் குழு
முருகேசன் என்பவர் நடனம் நடனம் அமைக்க, முருகேசன், கணேசன், ஐயப்பன், இளங்கோ, ராமலிங்கம், சதிஷ், ராம்குமார், ஆதிசக்தி மற்றும் சக்தி முருகேசன் ஆகியோர் அடங்கிய இளைஞர் குழுவினர் நாடகத்தில் சிறப்பாக நடித்து இருந்தனர். நாடகத்தை உள்ளுர், வெளியூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.
கிராம மக்கள் பாராட்டு
நாடகம் குறித்து அத்ந ஊர் நாட்டாமை மணிபிரபாகரன் கூறுகையில்,"சினிமா மற்றும் சின்னத்திரை நாடகங்களால்தான் மக்கள் மத்தியில் மேடை நாடகத்து மேல் உள்ள ஈர்ப்பு குறையக் காரணம், அது மற்றும் இன்றி வளந்து வரும் இந்தக் காலகட்டத்தில் பள்ளி படிப்பு முடிந்த உடன் கல்லூரி மற்றும் வேலை வாய்ப்புக்காக இந்த கிராமத்து இளைய சமுதாயம் வெளியூர் செல்ல நேரிடுகிறது அதனால் விருப்பம் இருந்தும் நேரம்கிடைக்க வாய்ப்பு குறைகிறது அவர்களுக்கு. இருப்பினும் இந்த முயற்சி வெகுவான பாராட்டுகளுக்கு உரியது, மேலாண்டுகளிலும் இந்த மேடை நாடகம் தொடரவேண்டும் என்று அம்மனை வேண்டிக்கொள்கிறேன் என்றார்.