17 ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டையிலிருந்து அச்சன்கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்
செங்கோட்டை: 17 ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டையிலிருந்து அச்சன்கோவிலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கேரள மாநிலத்தில் அச்சன்கோவிலில் ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு இருமுடி ஏந்தி லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
செங்கோட்டையிலிருந்து அச்சன்கோவிலுக்கு தினமும் 3 முறை இயக்கப்பட்டு வந்த தமிழக அரசு பேருந்துகள் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது.
இதனால் ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி இரு மாநில பயணிகளும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனினும் கேரள அரசு சார்பில் செங்கோட்டையிலிருந்து தினமும் காலை 8 மணி, மாலை 3.30 மணி, மாலை 5.30 மணி ஆகிய நேரங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
செங்கோட்டையிலிருந்து அச்சன்கோவிலுக்கு தமிழக அரசு மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் செங்கோட்டை போக்குவரத்து கழக பணிமனை சார்பில் 17 ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டையிலிருந்து அச்சன்கோவிலுக்கு நேற்று பேருந்து இயக்கப்பட்டது.