6 மாசத்துல ஆட்சி கவிழும் சொன்னாரு.. ஆனா 5 வருஷமா சிறப்பா ஆட்சி செஞ்சு இருக்கோம்.. முதல்வர் பெருமிதம்
நெல்லை: நான் முதல்வராக பதவியேற்றதும் ஒரே மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் கூறினார், இருப்பினும் தற்போது அதிமுக ஆட்சி ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது என்று நெல்லை பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். நெல்லை டவுன் வாகையடி முக்கு பகுதியில் திறந்த வேனில் நின்றபடி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்,
அப்போது அவர் பேசுகையில், அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை மக்களுக்குச் செயல்படுத்தி வருகிறது. இருபெரும் தலைவர்களின் வழியில் நான்கு ஆண்டுகளை நிறைவு பெற்று, ஐந்தாம் ஆண்டில் அதிமுக ஆட்சி அடியெடுத்து வைத்துள்ளது.
ஐந்தாம் ஆண்டில் அதிமுக ஆட்சி
நான் முதல்வராகப் பதவியேற்ற உடன் திமுக தலைவர் ஸ்டாலின், ஒரே மாதத்தில் ஆட்சி கவிழும், மூன்று மாதத்தில் கவிழும், ஆறு மாதத்தில் ஆட்சி கவிழும் என்று போகும் இடங்களில் எல்லாம் பேசினார். ஆனால் இன்று ஐந்தாம் ஆண்டில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
பல விருதுகள்
எனது தலைமையில் 4 ஆண்டுகளில் சிறப்பான சாலை வசதியை ஏற்படுத்தி உள்ளோம். பல்வேறு துறைகளில் இந்த அரசு விருது பெற்றுள்ளது. 2006-2011 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது தமிழகத்தில் கடும் மின்வெட்டு ஏற்பட்டது. அதனால் புதிய தொழிற்சாலைகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்றது. வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டது. ஆனால் இன்று தமிழகம் மின் மிகை மாநிலமாக இருந்து வருகிறது.
11 மருத்துவக் கல்லூரிகள்
இந்தியாவிலேயே 2000 மினி கிளினிக் அமைத்த ஒரே மாநிலம் தமிழகம் என்ற வரலாற்றையும் நாங்கள் படைத்துள்ளோம். தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்திற்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளோம். அதேபோல மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளது.
உயர் கல்வி விகிதிம்
அதிக பள்ளி கல்லூரிகள் தொடங்கியுள்ளோம். அதனால் படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 100க்கு 49 பேர் உயர் கல்வி பயின்று வருகின்றனர். எனவே வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.