கொரோனா: தியேட்டர்கள் மூடல்.. நோயாளிகளுக்கு தனி அறைகள் ரெடி.. நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் தீவிரம்
நெல்லை: கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டமாக இருப்பதால், நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மார்ச் 31 வரை மூட உத்தரவிட்டுள்ளதாக நெல்லையில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு கூட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.
Recommended Video
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 8 படுக்கை வசதிகள் கொண்ட தனி அறை அமைக்கப்பட்டுள்ளது எனவும், சந்தேகத்துக்குரிய காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு 10 படுக்கைகள் கொண்ட தனி அறை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்பொழுது, நெல்லை மாவட்டத்தில் தமிழக முதல்வர் உத்தரவுப்படி கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதியாக இருப்பதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான தனி வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களுக்கு முழு பரிசோதனை செய்யும் வசதி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும், மத வழிபாட்டுத் தலங்களிலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், சுத்தம் மற்றும் சுகாதாரத்தை காக்கும் வகையில் உள்ளாட்சி துறை நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஒவ்வொரு பயணத்திற்கு பின்பும் இருக்கைகள் மற்றும் கைப்பிடி கம்பிகளில் சுத்தம் செய்வதற்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும், அனைத்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கொரோனா பீதி இவுகளையும் சும்மாவிடவில்லை...பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்த ஐ.எஸ்.ஐ.எஸ். உத்தரவு!
இதனிடையே, தமிழகத்தின் எல்லையோர மாவட்ட திரையரங்கு, வணிக வளாகங்களை 31ஆம் தேதி வரை மூட ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருக்கும் எல்.கே.ஜி. முதல் 5 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் இருந்து வரும் பேருந்துகள், சரக்கு வாகனங்களுக்கு மருந்து தெளிக்கப்பட்ட பின்பே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா மற்றும் குரங்கு காய்ச்சல் காரணமாக சுகாதாரத்துறை பாதுகாப்பு நடவடிக்கையாக மருந்துகளை தெளித்து வருகின்றனர்.