பாஜகவின் ஏபிவிபி எதிர்ப்பு.. அருந்ததி ராய் புத்தகத்தை நீக்கிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை!
அருந்ததி ராய் எழுதியுள்ள Walking with the Comrades புத்தகம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி : எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததி ராயின் Walking with the Comrades என்ற புத்தகம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அருந்ததிராயின் படைப்புகள் உலகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் பாடதிட்டமாக வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு அருந்ததிராய் எழுதிய Walking with the Comrades பாடமாக வைக்கப்பட்டது.
வேல் யாத்திரை.. இது உங்க கடமை.. அதிமுகவுக்கு பாஜக வைத்த கோரிக்கை! சிபி ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி
அருந்ததிராயின் எழுத்துக்கள்
அருந்ததிராய் எழுதிய The God of Small Things (சின்ன விஷயங்களின் கடவுள் காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ் என்ற தனது முதல் நாவலுக்கு புக்கர் பரிசு பெற்று உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரானார். புனைவு எழுத்தாளரான அறிமுகமான அருந்ததிராய், அமெரிக்க ஆதிக்கத்தை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்.
அரசின் நடவடிக்கைக்கு விமர்சனம்
20 ஆண்டுகளுக்குப் பிறகு, The Ministry of Utmost Happiness என்ற நாவல் வெளியானது. ஆனால், அவருடைய முதல் நாவலான The God of Small Things அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பச்சை வேட்டை என்ற பெயரில் நடத்தப்பட்ட அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து எழுதினார்.
பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டம்
அருந்ததிராய் தலைமறைவாக உள்ள மவோயிஸ்ட்டுகளுடன் நடத்திய உரையாடலை Walking with the Comrades எழுதி 2011ம் ஆண்டு நூலாக வெளியானது. இந்த நூல், மாவோயிஸ்ட்களை வேறு ஒரு கோணத்தில் படம்பிடித்து காட்டியது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.ஆங்கிலம் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய Walking with the Comrades (தோழர்களுடன் ஒரு நடை) என்ற நூல் பாடத்திட்டமாக வைக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழகம் நீக்கியது
இந்த நிலையில், பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பினர் அருந்ததிராய் மாவோயிஸ்ட்கள் பற்றி எழுதிய Walking with the Comrades நூலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, பல்கலைக்கழககம் அருந்ததிராய் எழுதிய Walking with the Comrades நூலை பாடதிட்டத்திலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.
துணை வேந்தர் விளக்கம்
அருந்ததிராயின் Walking with the Comrades புத்தகம் 2017ம் ஆண்டில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் மாணவர்களுக்கு மூன்றாவது பருவத்தில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்புதான் இந்த நூலில் அருந்ததிராய் மாவோயிஸ்டுகளை புகழ்ந்துள்ளார் என்பது பல்கலைக்கழகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இது குறித்து விவாதிக்க பல்கலைக்கழகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்த குழு அருந்ததிராயின் நூலை பாடதிட்டத்தில் இருந்து நீக்க பரிந்துரை செய்துள்ளது. அதன் பிறகே, பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கடும் கண்டனம்
அருந்ததிராயின் நூல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு, திமுக எம்.பி கனிமொழி, எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம் எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்து விடும்." என்று தெரிவித்துள்ளார். இதே போல சு.வெங்கடேசன், எம்.பி, கவிஞர் வைரமுத்து ஆகியோரும் பாடத்தில் இருந்து அருந்ததி ராயின் புத்தகம் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.