பிரசவத்திற்கு போன மனைவி.. இசக்கியம்மாளுடன் உறவாடிய சுடலை - நடுரோட்டில் வெட்டுண்டு மாண்ட அவலம்!
கள்ளக்காதல் பலரது குடும்பத்தை காவு வாங்கியிருக்கிறது. குழந்தை பிறந்த மூன்றே நாளில் அந்த பிள்ளையின் முகத்தைக் கூட பார்க்காமல் மரணமடைந்திருக்கிறார் ஆட்டோ டிரைவர் சுடலை. காரணம் கள்ளக்காதல்தான்.
திருநெல்வேலி: சண்டைன்னு வந்துட்டா ஆள் பேசமாட்டாங்க அரிவாள்தான் பேசும் என்று நெல்லை, மதுரை மாவட்ட மக்களைப் பற்றி பேசுவார்கள். தாமிரபரணி ஆற்றின் சுவை நெல்லைக்கு எத்தனை பெருமை சேர்க்கிறதோ, கொடூர கொலைகள்,பழிக்கு பழி, ரத்தச்சரித்திரமும் நெல்லையை அடையாளப்படுத்துகிறது. இரு தினங்களுக்கு முன்பு நெல்லை டவுன் பகுதியில் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டார் ஒரு ஆட்டோ டிரைவர். அந்த கொலையின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொலைக்கான காரணம் கள்ளக்காதல். பிரசவத்திற்கு தாய்வீட்டிற்கு மனைவியை அனுப்பிய சுடலை பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி இசக்கியம்மாளுடன் ஏற்படுத்திக்கொண்ட தொடர்பே இப்போது உயிரை பறித்துள்ளது.
நெல்லை பேட்டையில் உள்ள சர்தார்புரத்தை சேர்ந்தவர் குட்டி என்கிற சுடலை. மே தின கொண்டாட்டங்கள் முடிந்து 2ஆம் தேதி பொழுது விடிந்த போது அதுதான் கடைசி விடியலாக இருக்கும் என்று ஆட்டோ டிரைவர் சுடலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வழக்கம் போல சவாரிக்கு கிளம்பினார் சுடலை.
கை தவறி தண்ணீருக்குள் விழுந்த ஐபோன்.. பத்திரமாக மீட்டு தந்த திமிங்கலம்.. வைரலாகும் வீடியோ
நள்ளிரவு வரையும் சவாரிக்கு சென்று விட்டு ஆர்ச் பகுதியில் காத்துக்கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. பஸ்சுக்காக சிலர் காத்துக்கொண்டிருந்தனர்.
அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. திடீரென அங்கு வந்த இரண்டு பேர் சுடலையை இழுத்துப்போட்டு சராமாரியாக வெட்டி வீசினர். நடந்த சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்த யாரும் தடுக்க முயலவில்லை. உயிரை காப்பாற்றிக்கொள்ள விலகி ஓடினர். வெட்டுப்பட்ட சுடலை ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார்.
இந்த சம்பவம் சிசிடிவியில் காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. வழக்கை விசாரித்த காவல்துறையினர் முருகன் என்பவரையும் அவருடைய நண்பரையும் கைது செய்து உள்ளனர்.
சுடலையின் கொலைக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று போலீசார் நடத்திய விசாரணையில்தான் இது கள்ளக்காதலுக்காக நடந்த கொலை என்று தெரியவந்துள்ளது. மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த சுடலையை போட்டு தள்ளிவிட்டான் முருகன்.
சுடலையின் மனைவி கர்ப்பமாக இருந்ததால் பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டு முருகன் மனைவி இசக்கியம்மாளுடன் கள்ளத்தொடர்பு ஏற்படுத்திக்கொண்டதாகவும் இதனை முருகன் கண்டித்தும் அதை கேட்காமல் நெருக்கமாக பழகியதுமே உயிரை பறித்துள்ளது.
சுடலையை கொல்ல ஸ்கெட்ச் போட்ட முருகன் அதற்காக சரியான நேரம் பார்த்து நண்பருடன் பின் தொடர்ந்துள்ளார். சவாரிக்காக ஆட்டோவுடன் காத்திருந்த நேரத்தில் வெட்டி வீசிவிட்டு சென்று விட்டனர். சிசிடிவி காட்சியில் பதிவான வீடியோ மூலம் இருவரும் போலீசில் சிக்கியுள்ளனர்.
கொலையான சுடலைக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையின் முகத்தைக்கூட பார்க்காமல் மரணமடைந்து விட்டார். முறையற்ற தொடர்பினால் கொடூரமான முறையில் கொலையானதோடு மனைவி, பிஞ்சு குழந்தையை அநாதையாக விட்டுவிட்டு போய்விட்டதாக உறவினர்களும் கதறியது இன்னமும் பலரது கண்முன்னால் வந்து போகிறது.
எத்தனை கள்ளக்காதல் கொலை சம்பவங்களைப் பற்றி படித்தாலும் அதைப்பற்றி சட்டை செய்யாமல் பலரும் முறையற்ற தொடர்பினால் வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் இதே போல கெங்கைபாண்டி என்ற இளைஞர் வெட்டிக்கொள்ளப்பட்டார். 23 வயதே ஆன கெங்கை பாண்டியின் கொடூர மரணமும் கள்ளக்காதலினால் நிகழ்ந்ததுதான். மாநிலம் முழுவதும் இதே போல நடந்த சம்பவங்களை கணக்கெடுத்தால் ஒரு பக்கத்தில் எழுதி விட முடியாது என்பதால் இன்றைக்கு இத்துடன் நிறுத்திக்கொள்கிறோம்.