பெண்ணே உன்ன பார்த்தா போதும்.. வேற யாரும் வேணாமே.. லாஸ்லியா ஆர்மி அலப்பறை
நெல்லை: பெண்ணே உன்ன பார்த்தா போதும். வேற யாரும் வேணாமே என உருகி, மருகி போஸ்டர் ஒட்டி லாஸ்லியா ஆர்மியைச் சேர்ந்தவர்கள் அலப்பறை செய்துள்ளனர்.
அருள்மிகு நெல்லையப்பர் ஆனித் தேரோட்டத் திருவிழாவையொட்டி, லாஸ்லியா ஆர்மியினர் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. சில வாரங்களை கடந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
பிக்பாஸ் ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளருக்கு ஆர்மி, கிரியேட் செய்து கொண்டாடுவது வழக்கமாகி விட்டது. கடந்த சீசனில் ஓவியா ஆர்மிக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இம்முறை இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா மரியநேசனுக்கு, ஆர்மி தொடங்கிய ரசிகர்கள், தலை மேல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
"அடியே லாஸ்லியா என்ன பாத்தியா" எனத் தொடங்கும் கானா பாடல் முதல் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸில் அவர் செய்யும், குறும்புதனமான பேச்சுகள், ஆனந்த தருணங்களை வைத்து, ஏராளமான டிக் டாக் வீடியோக்களையும் ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இலங்கையில் கிளிநொச்சியில் பிறந்த லாஸ்லியா, இலங்கையின் முதல் தமிழ் தொலைக்காட்சியான சக்தி டி.வி-யில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த சேனல் விஜய் டி.வி-யிலிருந்து நிகழ்ச்சிகளை வாங்கி ஒளிபரப்பியும் வருகிறது. பிக்பாஸ் போட்டியில் கலந்துக் கொண்டதற்குப் பிறகு லாஸ்லியாவின் பழைய செய்தித் தொகுப்புகளை யூ-டியூபில் தேடிப் பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.