நெல்லையில் பதற்றம்.. கொத்தனாரின் தலையை வெட்டி.. காலை துண்டித்த கும்பல்.. போலீசார் குவிப்பு!
கட்டிட தொழிலாளியை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர்
Recommended Video
நெல்லை: கொத்தனார் மணிகண்டனை சரமாரியாக வெட்டி, தலையை துண்டித்த 6 பேர் கொண்ட கும்பலை நெல்லை போலீசார் தேடி வருகின்றனர்.
கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். 27 வயதான இவர், ஒரு கட்டிட தொழிலாளி. முத்துமாரி என்ற மனைவியும் 3 மாத கைக்குழந்தையும் உள்ளது.
நேற்று இரவு கருப்பந்துறை மெயின் ரோட்டில் மணிகண்டன், தன்னுடன் வேலை பார்ப்பவர்களுடன் பேசி கொண்டிருந்தார். உடன் இருந்த 2 பேரும் தங்கள் செல்போனில் பேசிக் கொண்டிருக்க, மணிகண்டன் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தார்.
மணிகண்டன்
அப்போது 3 பைக்கில் 6 மர்மநபர்கள் வேகமாக வந்தனர். அதில் ஒருவர் திடீரென அரிவாளால் மணிகண்டனை காலில் வெட்டினார். ஒரே வெட்டில் கால் துண்டாகிவிட்டது. இதில் கதறி கொண்டு மணிகண்டன் ஓட முயற்சித்தார். அப்போது மற்றொரு நபர் மணிகண்டன் கழுத்தில் அரிவாளால் வெட்டினார். இதில் அவரது கழுத்து துண்டாகி, தலை தரையில் விழுந்தது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மணிகண்டன் அங்கேயே இறந்தார்.
மறியல்
மேலும் உடன் இருந்த மற்ற 3 நண்பர்களையும் அரிவாளால் தாக்க முயன்றது. தகவல் அறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு, மணிகண்டனின் சடலத்தை கண்டு பதறி அழுதனர். விஷயம் அறிந்து விரைந்து வந்த போலீசார், மணிகண்டன் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால், கொலையாளிகளை கைது செய்யும் வரை பிணத்தை எடுக்க விட மாட்டோம் என்று பொதுமக்கள் மறியல் செய்து, கோஷங்கள் எழுப்பினர்.
பதற்றம்
இதையடுத்து, நீண்ட நேர சமரசத்துக்கு பிறகு சடலம் மீட்கப்பட்டது. எனினும் மறியலை பொதுமக்கள் கைவிடவே இல்லை. விடிய விடிய கோஷங்கள் எழுப்பி கொண்டே இருந்தனர். இரவு முதலே பதற்றம் அதிகரிக்க துவங்கிவிட்டதால் கருப்பந்துறை, விளாகம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். படுகொலையை செய்தது யார் என்று தெரியவில்லை.
பிளக்ஸ் பேனர்
ஆனால் விளாகம் கிராமத்தை சேர்ந்த இருபிரிவினருக்கு ஏதோ முன்விரோதம் இருந்து வந்துள்ளதால், அதன் காரணமாகவே இந்த படுகொலை நடந்திருக்கலாம் என்கிறார்கள். சாதி தலைவருக்கு வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை கிழித்த பிரச்சனைதான் மணிகண்டனை குறிப்பிட்ட சமூகத்தினரை வெட்டி கொலை செய்ய காரணமாக இருந்திருக்கும் என்று முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.
அதிர்ச்சி
எனினும் கொலையாளிகளை பிடிக்க 4 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கொத்தனார் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் நெல்லை மாநகரமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.