தமிழ் இந்திய மொழி இல்லையா? தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா? ராகுல் காந்தி சரமாரி கேள்வி
தென்காசி: தமிழ் கலாசாரத்தை சீரழிப்பவர்களை அனுமதிக்கக் கூடாது என்று விமர்சித்துள்ள ராகுல் காந்தி, மக்களின் நலனைக் காப்பவர்கள்தான் தமிழ்நாட்டில் முதல்வராக வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
வரும் ஏப்ரல் 6ஆம் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ளதால் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர்.
அதன்படி காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தமிழ்நாட்டில் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பொதுமக்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
பரிவட்டம் கட்டி... நெல்லையப்பர் கோவிலில் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்த ராகுல் காந்தி
சிறு, குறு தொழில்கள்
அப்போது அவர் பேசுகையில், "சிறு தொழில்கள் மூலம் மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அவை தான் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முதுகெலும்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால் இன்று சிறு தொழில்கள் நசுக்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி அரசால் அந்த முதுகெலும்பு இன்று உடைக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. புதிய விவசாய சட்டங்களை உருவாக்கி, மோடி அரசு விவசாயிகளை அழிவுப்பாதைக்குக் கொண்டு சென்றுள்ளது.
தமிழ் இந்திய மொழி இல்லையா
தமிழ் பண்பாடு தமிழ் மொழி தமிழ் கலாச்சாரத்தை மோடி அழிக்க நினைக்கிறார். இந்தியா ஒரே நாடு ஒரே மொழி என்று கூறி வருகின்றார். தமிழ் மொழி இந்திய மொழி இல்லையா? தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா? தமிழர் கலாச்சாரம் இந்திய கலாச்சாரம் இல்லையா? இந்தியாவில் ஒரே மொழி ஒரே கலாச்சாரம் இருக்க வேண்டும் என்று மோடி கூறுகிறார்.
அதிமுக அரசு
தமிழக முதல்வரால் இன்று மக்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். அவர் நரேந்திர மோடியின் பின்னால் இருக்கிறார். மோடியிடம் கேள்வி கேட்பதற்குப் பதிலாக அவரிடம் சரணடைந்துள்ளார். ஊழல் மற்றும் சிபிஐ விசாரணையிலிருந்து தப்புவதற்காக நரேந்திர மோடியை அவர் சார்ந்துள்ளார். அதிமுக அரசை நரேந்திர மோடி கைப்பாவையாக வைத்து இயக்கி வருகின்றார்.
மக்கள் நலனைக் காப்பவர்கள்தான் முதல்வர்
தமிழ்நாட்டை யாரும் கைப்பாவையாக இயக்க முடியாது. தமிழ்நாடு என்பது தமிழக மக்களின் நாடு, இதை யாரும் இயக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. தமிழக மக்கள் நேர்மையானவர்கள். ஒரு அரசு என்பது பொதுமக்களுக்கும் உதவும் அரசாக இருக்க வேண்டும். மக்களின் நலனைக் காப்பவர்கள்தான் முதல்வராக வேண்டும்" என்று அவர் பேசினார்.