குற்றாலத்தில் மீண்டும் சிறுத்தை.. மெயின் அருவியில் வாக்கிங் போனதால் பரபரப்பு
குற்றாலம்: நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயினருவிப்பகுதி வனப்பகுதியாகும். இங்குள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் வனப்பகுதி தொடங்கிவிடுகிறது. இந்த பகுதியில் மிருகங்கள் நடமாட்டம் அறவே இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகாலமாக செண்பகாதேவி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட பின்னர் வனப்பகுதியில் வனவிலங்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது மழையில்லாததால் அருவிகளும் வெறிச்சோடி வருவதால் வனவிலங்குகள் உணவுத்தேடி ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக கடந்த 9ஆம் தேதி குற்றாலம் கார் பார்க்கிங் பகுதியில் காலையில் அங்குள்ள பாறையின் மீது 2 சிறுத்தைகள் உலா வந்தது தெரிய வந்தது. இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து விட்டு வரும்போது அந்த பகுதியிலுள்ள பாறையில் ஒரு சிறுத்தை உலா வந்துள்ளது.
இதனைக் கண்ட சுற்றுலா பயணிகள் கை தட்டி ஆரவாரம் செய்யவே சிறுத்தை பாறையின் இடுக்கில் பதுங்கியது. பின்னர் மக்களின் சப்தம் கேட்டு மரம் செடி கொடிகள் நிறைந்த பகுதிக்கு சென்று விட்டது. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். இது குறித்து குற்றாலம் வனத்துறையினர் தெரிவிக்கும் போது ஏற்கனவே இங்கு 22 சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாகவும், நீண்டகால இடைவெளிக்குப் பின் இப்போது மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டம் தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்கள்.