ஏய்.. ரெண்டுய்யா.. ஆஹா.. விளையாடுதய்யா.. குற்றாலத்தைக் கலக்கிய சிறுத்தைகள்
Recommended Video
நெல்லை: குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் அதிகாலையில் 2 சிறுத்தைகள் நடமாடியதை சிலர் செல்போன் கேமராவில் படம் பிடித்து அது தற்போது வைரலாகியுள்ளது. குற்றாலமே பரபரப்பாகி விட்டது.
குற்றாலம் அருவிப் பகுதியில் இதுவரை சிறுத்தைகள் நடமாட்டத்தை யாரும் பார்த்ததில்லை. மிகவும் பாதுகாப்பான பகுதியாகவே இதுவரை அது இருந்து வருகிறது. ஆனால் இன்று காலையில் திடீரென இரண்டு சிறுத்தைகள் நடமாடியது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
மெயினருவிப் பகுதியில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் அதிகாலை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து விட்டு வரும்போது அந்த பகுதியிலுள்ள பாறையில் 2 சிறுத்தைகள் ஹாயாக உலா வந்துள்ளன.
இதனைக் கண்ட சுற்றுலா பயணிகள் கைத்தட்டி ஆரவாரம் செய்யவே 2 சிறுத்தைகளும் உச்சி பாறையை நோக்கி போயுள்ளன. பின்னர் அங்கு கொஞ்ச நேரம் உலாவிய சிறுத்தைகள் பின்னர் மெயினருவி நீர்கொட்டும் உச்சி பகுதிக்கு சென்றுவிட்டன.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதி வியாபாரிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கவே அவர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். குற்றாலநாதர் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் இருந்து மலைப்பகுதியில் பார்த்த போது அங்கு இரண்டு சிறுத்தைகள் நடமாட்டம் தெளிவாக தெரியவே சிலர் அங்கிருந்து சிலர் செல்போனில் வீடியோ எடுத்ததில் பதிவானது.
இது குறித்து வனத்துறையினர். தெரிவிக்கும் போது ஏற்கனவே இங்கு சிறுத்தைகள் நடமாட்டம் இருந்துள்ளன. நீண்டகால இடைவெளிக்குப் பின் இப்போது மீண்டும் நடமாட்டம் உள்ளதாக தெரிவித்தார்கள்.