"தம்பி..வார்ன் பண்ணியும் ஏன் ஆபாச வீடியோ பார்த்தீங்க.. மன்னிச்சுடுங்க சார்.. இளைஞரை எச்சரித்த போலீஸ்
ஆபாச வீடியோ பார்த்த இளைஞரை போலீசார் எச்சரித்துள்ளனர்
நெல்லை: "தம்பி.. ஏற்கனவே நாங்க வார்ன் பண்ணி இருக்கோம்.. திரும்பவும் இந்த மாதிரி வீடியோவை பார்த்தீங்கன்னா என்ன அர்த்தம்" என்று போலீஸ்காரர் கேட்க.. "இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்.. என்னை மன்னிச்சுடுங்க" என்று இளைஞர் ஒருவர் பதிலளிக்கும் ஆடியோ ஒன்று பெரும் வைரலாகி வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி சில தினங்களுக்கு முன்பு, ''குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் மற்றும் வீடியோ பார்த்தவர்களின் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள், விரைவில் கைது செய்யப்படுவர். குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம்.
ஆபாச படம், வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப்களில் வைத்திருப்பதும், அது சம்பந்தப்பட்ட லிங்க்குகளை பதிவிறக்கம் செய்வதும் சட்டப்படி குற்றம்தான். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர், தகவல் தொழில் நுட்பம் மற்றும், 'போக்சோ'வில் கைது செய்யப்படுவர். 3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்" என்று தெரிவித்திருந்தார்.
சிறையில் இருந்து விடுதலையான பின் அதிமுகவை வழிநடத்துவார் சசிகலா.. சொல்வது சுப்பிரமணியன் சுவாமி
சைபர் கிரைம்
இந்நிலையில், சென்னையில் உள்ள சைபர்கிரைம் போலீசார் செல்போன் எண்களை ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போதுதான் நெல்லை மாவட்டம் மருதகுளம் அருகே சுமார் 400-க்கும் மேற்பட்டோர் இந்த ஆபாச வீடியோ டவுன்லோடு செய்ததையும் கண்டுபிடித்து உள்ளனர். இதில் 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆடியோ
இப்படி நோட்டீஸ் அனுப்பியும் இவர்களில் சிலர் திரும்பவும் அதே ஆபாச வீடியோவை பார்த்துள்ளனர்.. அவர்களுக்கு போன் செய்துதான் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்படி இளைஞர் ஒருவருடன் போலீஸ் பேசும் வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆடியோ
அந்த ஆடியோவில் போலீஸ், ''தம்பி.. ஏற்கனவே நாங்க வார்ன் பண்ணி இருக்கோம்.. திரும்பவும் இந்த மாதிரி வீடியோவை பார்த்தீங்கன்னா என்ன அர்த்தம்.. அரசு சார்பாக அது குற்றம் என்று அறிவிக்கப்பட்ட பிறகும் நீங்கள் இப்படி பார்த்ததால் உங்களுக்கு எச்சரிக்கை செய்து நோட்டீஸ் அனுப்பி இருக்கோம்.. நேத்து இந்த வீடியோவை நீங்கள் பார்த்து இருக்கீங்க.. இது சட்டப்படி குற்றம்" என்கிறார். அதற்கு பதில் அளித்த இளைஞர் "இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்.. என்னை மன்னிச்சுடுங்க சார்" என்கிறார்.. இப்படி ஒரு ஆடியோதான் வைரலாகி வருகிறது.
பரபரப்பு
குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களுக்கு போலீசாரே நேரடியாக போன் செய்து பேசிய ஆடியோ வெளியானது, வீடியோ பார்த்து வருபவர்களை தூக்கி வாரி போட்டுள்ளது.. இவர்கள் அனைவருமே இப்போது கடுமையான அதிர்ச்சியில் உள்ளனர்.. அதனால் எப்படியும் குழந்தைகள் சம்பந்தமான ஆபாச வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!