சூரத்தில் பிற மாநில தொழிலாளர்கள் போராட்டம்- போலீசார் கண்ணீர்புகை வீச்சு- ஆந்திரா, தமிழகத்தில் மறியல்
அகமதாபாத்: குஜராத்தின் சூரத் நகரில் பிற மாநில தொழிலாளர்கள் இன்று மீண்டும் போராட்டம் நடத்தினர். தங்களை சொந்த மாநிலங்களுக்கு திருப்ப அனுப்பக் கோரி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கண்ணீர்புகை வீசி கலைத்தனர்.
நாடு முழுவதும் 40 நாட்கள் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் தற்போது சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.
இன்னும் 2 வார காலத்துக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நாட்டின் பல பகுதிகளில் பிற மாநில தொழிலாளர்கள் தங்களை திருப்ப அனுப்பக் கோரி நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கூடங்குளம், வேலூரில் போராட்டம்
தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திலும் பிற மாநில தொழிலாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர். தங்களை சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும் என்பது பிற மாநில தொழிலாளர்களின் கோரிக்கை. ஏற்கனவே லாக்டவுன் தளர்த்தப்பட்ட போதே கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிய அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் கட்டுமான பணியில் ஈடுபட்ட பிற மாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதேபோல் வேலூரிலும் பிற மாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றது.
ஆந்திராவில் தடியடி
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கொவ்வூரு பகுதியில் பீகார், ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் நடைபயணமாக சொந்த ஊர் செல்ல முயன்றனர். 300க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சொந்த ஊர் கிளம்பியதால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் தடியடி நடத்தி பிற மாநில தொழிலாளர்களை போலீசார் கலைந்து போக செய்தனர்.
சூரத்தில் போராட்டம்
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் மீண்டும் பிற மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஏற்கனவே பலமுறை பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி போராடினர். ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் ஆவேசமடைந்த தொழிலாளர்கள் இன்றும் போராட்டம் நடத்தினர்.
|
சூரத் வன்முறை- கண்ணீர்புகை வீச்சு
சூரத் புறநகர் பகுதியான வரேலியில் தங்களது போராட்டத்தை பிற மாநில தொழிலாளர்கள் நடத்தினர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து தொழிலாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இம்மோதலில் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி அவர்களைக் கலைத்தனர்.