Exclusive: அதிமுக பாச்சா நாங்குநேரியில் பலிக்காது- காங்.வேட்பாளர் ரூபி மனோகரன் அதிரடி
நாங்குநேரி தொகுதியில் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும், அதிமுக பாச்சா இந்தமுறை பலிக்காது எனவும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு;
கேள்வி: நாங்குநேரி தொகுதியில் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பதில்: எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏற்கனவே இந்தத் தொகுதிக்கு அண்ணன் வசந்த்குமார் நிறைய பணிகளை செய்துள்ளார். அதனால் எனது வெற்றி ஏற்கனவே உறுதிசெய்யப்பட்ட ஒன்று. நிச்சயம் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன், அதில் சந்தேகமே வேண்டாம்.
கேள்வி: ஆளுங்கட்சி வேட்பாளருக்கு எதிராக களம் காண்கிறீர்கள்... அவர்களின் பலத்துக்கு உங்களால் ஈடுகொடுக்க முடியுமா?
பதில்: நெல்லை மாவட்ட மக்கள் விவரமானவர்கள், படித்தவர்கள். அதனால் இங்கு பணத்தை வைத்து சாதித்து விடலாம் என ஆளுங்கட்சி எண்ணுவதெல்லாம் நாங்குநேரியில் செல்லுபடியாகாது. எந்தக் கட்சிக்கு வாய்ப்பு தர வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் நாங்குநேரி மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஆகையால் நாங்குநேரி மக்களிடம் பணத்தைக் கொண்டு ஆளுங்கட்சியால் விலைபேச முடியாது. மொத்தத்தில் அதிமுகவின் பாச்சா இங்கு பலிக்காது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் தகவல்
கேள்வி: உங்களுக்கு சீட் வழங்கப்பட்டதற்கு காங்கிரஸிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளதே?
பதில்: ஒரு எதிர்ப்பும் இல்லை. இப்போது உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் என்னுடன் தான் அமர்ந்திருக்கின்றனர். எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம். எந்த கருத்துவேறுபாடும் இல்லை, எனக்கு யாரும் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
கேள்வி: தேர்தலில் வெற்றி பெற்றால் நாங்குநேரி தொகுதிக்கு என்ன செய்வீர்கள்?
பதில்: மீண்டும் சொல்கிறேன் அண்ணன் வசந்த்குமார் இந்த தொகுதிக்கு எண்ணற்ற பணிகளை செய்துள்ளார். அவர் விட்டுச்சென்ற மக்கள் நலப்பணிகளை தொடர்வேன். மேலும், இந்த தொகுதியை பொறுத்தவரை முழுக்க முழுக்க விவசாயத்தை சார்ந்து இருக்கிறது. ஆகையால் விவசாயிகளுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை அமைத்து கொடுத்து விவசாயத் தொழிலில் நம்பர் 1 தொகுதியாக நாங்குநேரியை கொண்டுவர விரும்புகிறேன். இதேபோல் உறுதியாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேன்.
கேள்வி: உங்களுக்கு வாக்குகேட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைமையில் இருந்து யாராவது வருகிறார்களா?
பதில்: நிச்சயம் ராகுல்காந்தி வருவதற்கு மிக அதிக வாய்ப்புகள் உள்ளன. தலைவர் அழகிரி அவர்கள் ராகுலிடம் தேதி கேட்டிருக்கிறார், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வருவது குறித்து தெரியவரும். இதேபோல் ப்ரியங்கா காந்தியும் பிரச்சாரத்திற்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
கேள்வி: விமானப்படை பணியை உதறிவிட்டு அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்?
பதில்: அரசியலுக்கு புதிதாக வரவில்லை, முதலில் நான் காமராஜரின் பக்தன். அரை டவுசர் போட்டக்காலத்திலேயே காமராஜருக்காக சுவர் விளம்பரம் எழுதியவன் நான். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் காங்கிரஸ் மீது ஈடுபாடு கொண்டவர்கள். ராஜீவ்காந்தி மறைவு செய்தியை அறிந்து எனது தந்தை மயங்கிவிழுந்தார். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் அந்தளவுக்கு காங்கிரஸ் மீது ஈடுபாடு கொண்டது எங்கள் குடும்பம். பொதுவாக நம்மை சார்ந்துள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும், ஏதாவது ஒரு வகையில் அவர்களையும் வளர்ச்சியடைய வைக்க வேண்டும் என எண்ணுபவன் நான்.