எல்லா தலைவர்களும் உள்ளே போகப் போறாங்க.. காங். செயற்குழுவை திகாரிலேயே வச்சுக்கலாம்.. சாமி பொளேர்!
நெல்லை: காங்கிரஸ் தலைவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்பதால் செயற்குழு கூட்டத்தை திகார் சிறையில் வைத்துக் கொள்ளலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "பொருளாதார மந்த நிலை இருப்பதாக கூறுவது தவறு. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலத்திலும் பொருளாதார பிரச்சினை இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அதிக ஊழல்தான் தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு காரணம். ப.சிதம்பரத்தின் மீது 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் தலைவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்பதால் செயற்குழு கூட்டத்தை திகார் சிறையில் வைத்துக் கொள்ளலாம்.
வெளிநாடுகளில் இருப்பது போன்ற நீர் மேலாண்மையை இந்தியாவில் ஏற்படுத்த வேண்டும். சவுதி, இஸ்ரேலில் ஆறு, குளம் கிடையாது; ஆனால் அங்கு 24 மணி நேரமும் குழாயில் தண்ணீர் வரும். சவுதி, இஸ்ரேல் போன்று நம் நாட்டிலும் நீர் மேலாண்மையை ஏற்படுத்த வேண்டும் பல ஆண்டுகளாக இது பற்றி நான் பேசியும், எழுதியும் வருகிறேன். நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் இருந்தது போன்ற மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.
நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது: சு.சுவாமி அட்டாக்
விவசாயிகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். இதற்காக நமது கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் பெரிய அளவில் வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும்" என்றார்.