நெல்லையா.. ஐய்யோ வேண்டாம்.. அதிமுக கூட்டணியில் அதிர்ச்சி.. காங்கிரசுக்கு செம குஷி
Recommended Video
நெல்லை: நெல்லை லோக்சபா தொகுதியில் போட்டியிட பாஜக முக்கிய புள்ளி விரும்பவில்லை என தெரிகிறது. எனவே, காங்கிரஸ் அந்த தொகுதியை எளிதாக வெல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி, திமுக-காங்கிரஸ் நடுவேயும், அதிமுக-பாஜக நடுவேயும் கூட்டணிகள் அமைந்துள்ளன. பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில், பாஜக விரும்பி கேட்ட தொகுதியில் ஒன்று, நெல்லை என்று கூறப்பட்டது. இதற்கு காரணம் உள்ளது.
பாஜகவில் நயினார்
அதிமுகவின் நெல்லையில் முக்கிய புள்ளியாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன். அவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாஜகவில் இணைந்தார். ஏற்கனவே தொகுதியில் அவருக்கு இருக்கும் செல்வாக்குடன், பாஜக ஆதரவும் இருப்பதால், நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரனை களமிறக்க பாஜக தலைமை திட்டமிட்டதாக கூறப்பட்டது.
அதிமுக ஜகா
இந்த நிலையில், இப்போது நயினார் நாகேந்திரன் இந்த தொகுதியில் போட்டியிட தயங்கி வருவதாக கூறப்படுகிறது. எனவே, அதிமுக தரப்பில் 'வானளாவிய அதிகாரம்' கொண்டவரின் மகன் லோக்சபா தேர்தலில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அவரும் போட்டியிட தயாராக இல்லையாம். அதற்கு பதில் ராஜ்யசபா எம்பி பதவியை தாங்க என அவர் வற்புறுத்துகிறாராம்.
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்
இத்தனைக்கும் காரணம், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததுதான் என்கிறாரா்கள். நெல்லை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நெல்லை சட்டசபை தொகுதியில் முஸ்லீம்கள் கணிசமாக உள்ளனர். பாளையங்கோட்டை தொகுதியில், கிறிஸ்தவர்கள் மிக அதிகம். இவர்கள் பாஜக கூட்டணிக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்பதுதான், அதிமுக வேட்பாளரின் அச்சத்திற்கு காரணமாம். சில கிறிஸ்தவ நிர்வாகிகள் பாஜக கூட்டணிக்கு எதிராக சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது, இதை உறுதி செய்துள்ளது.
காங்கிரசுக்கு செல்வாக்கு
நெல்லை தொகுதி பாரம்பரியமாக காங்கிரசுக்கு வாக்களிக்கும் ஆதரவாளர்களை அதிகம் கொண்டது. இந்த சூழ்நிலையால், காங்கிரசுக்கு நெல்லை லோக்சபா தொகுதியை ஒதுக்கீடு செய்ய, திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவுக்கு செல்லும் கிறிஸ்தவ, முஸ்லீம் வாக்குகள் திமுக கூட்டணிக்கு திரும்பும் என்பதால் குஷியில் உள்ளதாம் காங்கிரஸ்.