கொரோனா.. ஹாட் ஸ்பாட்டாக மாறும் கொங்கு.. அதிர்ச்சி தரும் திருநெல்வேலி.. மிக முக்கியமான 4 மாவட்டங்கள்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் ஹாட் ஸ்பாட்டாக 4 முக்கியமான மாவட்டங்கள் மாறி வருகிறது.
திருநெல்வேலி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் ஹாட் ஸ்பாட்டாக 4 முக்கியமான மாவட்டங்கள் மாறி வருகிறது. ஒரே நாளில் நேற்று தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது... நேற்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் இந்த செய்தியை வெளியிட்ட போது அங்கு இருந்து செய்தியாளர்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் நேற்று கொரோனா ஏற்பட்ட இந்த 57 பேரையும் சேர்த்து மொத்தமாக 124 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இதில் நேற்று திருநெல்வேலியில் இருந்துதான் அதிகமாக 22 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தமாக அங்கு 23 பேருக்கு கொரோனா உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் திருநெல்வேலி இரண்டாம் இடம் வகிக்கிறது.
சென்னை நிலை
தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா ஹாட் ஸ்பாட் என்று ஈரோடு மற்றும் சென்னை அறிவிக்கப்பட்டுவிட்டது. சென்னையில் 28 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் ஸ்டேஜ் 1 வகை நோயாளிகள். 4 பேர் ஸ்டேஜ் 2 வகை நோயாளிகள். இதனால் சென்னை ஏற்கனவே கொரோனாவின் ஹாட் ஸ்பாட் என்று அறிவிக்கப்பட்டு, அங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளனர். அதேபோல் ஈரோடும் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஈரோட்டில் மொத்தம் 19 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு நிலை
தமிழகத்தில் ஐந்தாவது கேஸ் ஈரோட்டில்தான் ஏற்பட்டது. அங்கு 75 வயது நபர், ஐஆர்டி மெடிக்கல் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 21ம் தேதி டெல்லியில் இருந்து இவர் ஈரோடு வந்துள்ளார். இவருக்கு கொரோனா ஏற்பட்டது . அதேபோல் 6வது கேஸ் அதே நாளில் ஈரோடு வந்த தாய்லாந்து பயணி ஆவார். இவர்கள் இருவர் மூலம் பலருக்கு வரிசையாக கொரோனா பரவி இருக்கிறது.
யாருக்கு எல்லாம் பாதிப்பு
தமிழகத்தில் பதிவான 26வது கேஸ் மற்றும் கேஸ் எண் 47, 48, 49, 50 ஆகிய நபர்களுக்கு ஈரோட்டில் இருந்துதான் கொரோனா ஏற்பட்டது. அதேபோல் கேஸ் எண் 56 முதல் 65வது நோயாளிகள் வரை ஈரோட்டில் இருந்து கொரோனா வைரஸ் ஏற்பட்டது. இதனால் ஈரோடு மொத்தமாக மூடப்பட்டு உள்ளது. ஈரோட்டில் மட்டும் 5560 பேர் தற்போது வீட்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
வேறு சில மாவட்டங்கள்
அதேபோல் நாமக்கல்லில் மொத்தம் 18 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு கொரோனா ஏற்பட்டவர்களில் அதிகமாக 11 பேருக்கு ஸ்டேஜ் 2 மூலம் கொரோனா ஏற்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். இது போக கொங்கு மாவட்டங்கள் எல்லாம் கொரோனா காரணமாக மிக தீவிரமாக பாதிக்கப்பட்டு உள்ளது. சேலத்தில் 6 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. கோவையில் ஐந்து பேருக்கு கொரோனா ஏற்பட்டு உள்ளது. தருமபுரி, திருப்பூரில் பலர் கொரோனா அறிகுறியோடு அனுமதி ஆகியுள்ளார்.
டெல்லி கூட்டம்
திருநெல்வேலியில் மொத்தமாக 23 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று திருநெல்வேலியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 22 பேரில் 20 பேர் டெல்லி மத கூட்டத்திற்கு சென்று வந்தவர்கள். டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மத கூட்டம் ஒன்றில் இவர்கள் எல்லோரும் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட பலருக்கு நாடு முழுக்க கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலியை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா பரவி உள்ளது. மீதம் உள்ள 2 பேர் டெல்லி சென்று வந்தவர்களின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலப்பாளையத்தில் அதிகமான நபர்கள்
திருநெல்வேலியில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட மொத்தம் உள்ள 23 பேரில் 17 பேர் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள். முக்கியமாக 10 பேர் ஒரே தெருவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஒரே பகுதியில் அதிக பேருக்கு கொரோனா ஏற்பட்ட இடம் என்றால் அது மேலப்பாளையம்தான்.
மொத்தமாக மூடினார்கள்
இதனால் தற்போது மேலப்பாளையத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அங்கு எல்லோரும் வீட்டிற்குள் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சாலைகள் மொத்தமாக பேரிகேட் போட்டு மூடப்பட்டுள்ளது. மேலப்பாளையத்தை இணைக்கும் சாலைகள் எல்லாம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. தற்போது மேலப்பாளையம் தனித்தீவு போல மாறியுள்ளது.
நான்கு மாவட்டங்கள்
தமிழகத்தில் சென்னை, ஈரோடு, திருநெல்வேலி, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் போல மாறியுள்ளது. அதேபோல் கொங்கு மாவட்டங்கள் இதனால் அதிக அளவில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹாட் ஸ்பாட் என்பது ஒரு இடத்தில் அதிக நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அங்கு பலருக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பது ஆகும். தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் பலருக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது.