காலையிலேயே 50 கொரோனா கேஸ்கள்.. திருநெல்வேலியில் நடந்த ஷாக் திருப்பம்.. காரணம் கோயம்பேடு கிடையாது!
திருநெல்வேலி: தமிழகத்தில் திருநெல்வேலியில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கோயம்பேடு மார்கெட் காரணம் இல்லை என்கிறார்கள்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் 309 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 10108 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் 2599 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 71 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் தமிழகத்தில் 5 பேர் பலியானார்கள்.
Corona cases: கொரோனா பாதிப்பில் பிரிட்டன், இத்தாலியை முந்துகிறது பிரேசில்.. கவலையில் மக்கள்
நெல்லை நிலை
நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் நேற்று வரை 114 பேருக்கு மட்டுமே கொரோனா இருந்தது.அதன்பின் நேற்று மாலை அங்கு 22 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு மொத்தம் எண்ணிக்கை 136 ஆனது. தற்போது அங்கு 186 ஆக இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
கோயம்பேடு காரணமா?
இப்படி திடீர் என்று அங்கு எண்ணிக்கை உயர கோயம்பேடு காரணம் இல்லை என்கிறார்கள். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் கேஸ்கள் அதிகம் வர காரணம் கோயம்பேடு என்பது குறிப்பிடத்தக்கது. கோயம்பேட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றதால் மாநிலம் முழுக்க கொரோனா பரவியது. திருநெல்வேலியிலும் தொடக்கத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க கோயம்பேடு காரணமாக பார்க்கப்பட்டது.
உண்மை பின்னணி
ஆனால் தற்போது அங்கு கொரோனா கேஸ்கள் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் நபர்களால் ஏற்படுகிறது. கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கில் தற்போது தமிழக அரசு சில தளர்வுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி வெளி மாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் தமிழகத்திற்குள் பாஸ் இருந்தால் எல்லையில் நுழையலாம். இதனால் மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழர்கள் தங்கள் சொந்த ஊருக்கு வருகிறார்கள்.
காரணம் இதுதானா
நேற்று தமிழகம் வந்தவர்களில் பலர் திருநெல்வேலி சென்றார்கள். நேற்று மகாராஷ்டிராவில் இருந்து திருநெல்வேலி வந்தவர்களில் 22 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நேற்று திருநெல்வேலியில் கொரோனா ஏற்பட்ட நபர்கள் எல்லோருக்கும் மகாராஷ்டிரா மூலம்தான் கொரோனா ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் இன்று மொத்தம் 50 பேருக்கு ஒரே நாளில் கொரோனா ஏற்பட்டுள்ளது.
தீவிரம்
இவர்கள் எல்லோரும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள். இவர்கள் மகராஷ்டிரா மற்றும் சென்னையில் இருந்து வந்தனர். இவர்கள் யாருக்கும் கோயம்பேடு தொடர்பு இல்லை. வெளியூரில் இருந்து திருநெல்வேலி வரும் இவர்களை கங்கைகொண்டான் எல்லையில் சோதனை செய்கிறார்கள். எல்லையிலேயே வைத்து சோதனை செய்கிறார்கள். இதில் அந்த மாவட்ட நிர்வாகம் மிக சிறப்பாக செயல்படுகிறது.
சிகிச்சைக்கு அனுமதி
அதன்பின் அறிகுறி உள்ள நபர்களை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்கிறார்கள். இதனால் கொரோனா நோயாளிகள் ஊருக்குள் செல்லும் முன்பே அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா என்று கண்டுபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் கொரோனா பரவல் அங்கு மேலும் தடுக்கப்படுகிறது. இப்படித்தான் இந்த 50 பேர் இன்று கண்டுபிடிக்கப்பட்டனர். அதேபோல் தென்காசியில் இன்று காலை 8 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 66 பேருக்கு மொத்தமாக கொரோனா உள்ளது.