கொட்டோ கொட்டுன்னு கொட்டிய குற்றால அருவிகளில் சொட்டு சொட்டுன்னு சொட்டுது!
குற்றாலம்: குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து சுத்தமாக நின்று போய் நீர் சொட்டிக் கொண்டுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான நெல்லைமாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் 11 நீர்தேக்கங்களும்,ஏராளமான அருவிகளும் நிரம்பியுள்ளன.
இதில் ஆண்டுக்கு 1 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் முக்கியபகுதியாக விளங்கும் குற்றாலத்திலுள்ள அருவிகளில் ஆண்டுத்தோறும் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் 8 மாதங்கள் தண்ணீர் கொட்டுவது வழக்கம்.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் பொய்த்து போனதால் அவ்வப்போது உருவான புயல் காரணமாக பெய்த மழையினால் அருவிகளில் நீர்வரத்து இருந்துவந்தது.
தற்போது கடுமையான வெயில் வாட்டிவருவதால் வனப்பகுதிகளிலுள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளதால் அருவிக்கு ஆர்ப்பரித்துவரும் நீரின் அளவு மிகவும் குறைந்து விட்டதால் குற்றால அருவிகளும், சன்னதி வீதிகளும் வெறிச்சோடி உள்ளது.
கொட்டோ கொட்டுன்னு கொட்டிய குற்றால அருவிகளில் சொட்டு சொட்டுன்னு கொட்டும் நீர் அருவி நீரில் எண்ணிக்கையளவில் சிலர் மட்டும் குளித்து செல்கின்றனர். சுற்றுலா வரும் நபர்கள் குற்றாலம், ஐந்தருவிக்கு வந்ததற்கு சாட்சியாக செல்பி எடுத்து சென்றவண்ணம் உள்ளனர். மொத்தத்தில் குற்றால அருவிகளும்,வீதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.