திரிபுராவில் வீழ்த்தப்பட்டு.. நெல்லையில் எழுந்த 12 அடி உயர லெனின்.. தோழர்கள் உணர்ச்சி முழக்கம்!
நெல்லை: திரிபுராவில் பாஜகவால் லெனின் சிலை வீழ்த்தப்பட்ட நிலையில், நெல்லையில் லெனின் சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும், எம்பியுமான சீதாராம் யெச்சூரி திறந்து வைத்தார்.
நெல்லை ரெட்டியார்பட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை திறக்கப்பட்டது. சிலையை கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரும், எம்பியுமான சீதாராம் யெச்சுரி திறந்துவைத்தார்.
பின்னர் சிலைத் திறப்பு விழாவில் அவர் பேசியதாவது: இச்சிலையை சிறப்பாக உருவாக்கிய நெல்லை தோழர்களுக்கு செவ்வணக்கம் செலுத்துகிறேன். இந்தியாவின் உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்கி வைக்கும் முதலாளித்துவ சக்திகளை புரட்சியாளர் லெனின் வழியில் சென்று வெற்றிகொள்ள உறுதி ஏற்க வேண்டும்.
உழைப்பாளிகளுக்கு அநீதி
ரபேல் விமான ஒப்பந்தம் முதல் வாரக்கடன் என்று அனைத்து சிக்கல்களிலும் பெரிய முதலாளிகளுக்கு சாதகமாக பாஜக தலைமையிலான மத்திய அரசு, உழைக்கும் வர்க்கத்தினருக்கு அநீதி இழைக்கிறது. அனைத்து எதிர்க் கட்சிகளின் தலைவர்களும் தன்னை வீழ்த்த ஒன்றுபட்டுள்ளதாக மோடி கூறி வருகிறார்.
மோடியின் வீழ்ச்சிதான் விருப்பம்
உண்மையில் ஒட்டுமொத்த இந்திய மக்களின் விருப்பமும் மோடி வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான். அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் என்று உலகில் பல நாடுகளில் பாசிச சக்திகள் தலைதூக்கிவருகிறது.
சூறையாடும் அரசு
அவர்கள் மக்களின் உணர்வுகளை தூண்டி வாழ்க்கையை சூரையாடுகின்றனர். இந்தியாவில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அத்தகைய சக்தியாக உருவெடுத்து உள்ளது என்று கூறினார். சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முறைகேடுகள் நிறைந்த அரசு
தேர்தலுக்கு பிறகு பிரதமரை தேர்ந்தெடுப்போம் முன் கூட்டியே அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.மர்ம முடிச்சுகள் நிறைந்த அரசாக தமிழக அரசு உள்ளது. எல்லாவிதமாக முறைகேடுகளையும் கொண்ட அரசாக தமிழக அரசு உள்ளது மக்களுக்கான அரசாக இல்லை.
ராஜினாமா செய்யுங்கள்
தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜேக்டோ-ஜியோவினருக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்.
நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானார்ஜி பெரிய வெற்றி பெற முடியாது. பிரிகேட் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே மிக குறைவான கூட்டம் மம்தா பொதுக் கூட்டத்திற்கு கூடியது.
மதிமுக கருப்புக்கொடி
தமிழகம் வரும் பிரதமருக்கு மதிமுகவினர் கருப்பு கொடி காட்டுவதற்கு எங்கள் ஆதரவு உண்டு. ஆனால் கலந்து நாங்கள் கொள்ள மாட்டோம். மேற்குவங்கத்தில் மம்தாவையும், தேசிய அளவில் பாஜகவையும் வீழ்த்துவதுதான் எங்களின் இலக்கு என்று பாலகிருஷ்ணன் கூறினார்.
திரிபுராவிற்கு பின் நாட்டிலேயே 2வது இடமாக தமிழகத்தின் நெல்லையில் 12 அடி சிலை திறக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் வீழ்ந்தது நெல்லையில் எழுந்தது என்ற முழக்கத்துடன் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.