3 டன் விறகுகளை எரித்து உருவான பூக்குழி.. பய பக்தியோடு இறங்கிய பக்தர்கள்.. நெல்லை அருகே பரவசம்
Recommended Video
நெல்லை: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற அருணாப்பேரி அழகு முத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு கொளுந்துவிட்டு எரியும் நெருப்பில் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர்.
நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரம் அடுத்துள்ள அருணாப்பேரி கிராமத்தில் பழமை வாய்ந்த அழகுமுத்து மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
பிரசித்திப் பெற்ற இந்த ஆலயத்தில் 56 வது ஆண்டு திருவிழா, 41 வது நாள் மண்டலபூஜை மற்றும் கும்பாபிஷேகம் கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. அப்போது கோவிலைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட வில்லிசை கலைஞர்களின் கச்சேரி விடிய விடிய நடந்தது.
இதனை தொடர்ந்து அம்மன் முக்கிய வீதிகளின் வழியாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
இதையடுத்து, பூக்குழி இறங்குவதற்காக கோவில் வளாகத்தின் நடுவில் 3 டன் விறகுகளை 15 அடிக்கு மேல் அடுக்கி வைத்தனர். பின்னர் அதில் தீ மூட்டினர். இதனை தொடர்ந்து அதிகாலையில் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
விரதம் மேற்கொண்ட பக்தர்கள் திரளாக அக்னி குண்டத்தில் ஒன்றன் பின் ஒன்றாக இறங்கினர். கொளுந்துவிட்டு எரிந்த தீயில் நூற்றுக்கணக்கானோர் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சிவன்பாண்டி தலைமையில் விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.