ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு கடல் போல திரளும் தொண்டர் கூட்டம்.. நாங்குநேரியில் திமுக கூட்டணி குஷி
நெல்லை: நாங்குநேரி தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய செல்லக் கூடிய இடங்களில் எல்லாம், பெரும் தொண்டர் கூட்டம் கூடி வரவேற்பு அளித்து வருகின்றனர்.
நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுகவுடன் கூட்டணி கட்சியான காங்கிரசின் சார்பில், தொழிலதிபர், ரூபி மனோகரன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று முதல், நாங்குநேரி தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திண்ணைப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
இன்றைய தினம் அவர் பேரூர், பரப்பாடி, இட்டமொழி, வடக்கு விஜயநாராயணம், மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி உள்ளிட்ட நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட, பல்வேறு கிராம பகுதிகளில் திறந்த வெளி வேனில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம், அலைகடலென தொண்டர் கூட்டம் அலைமோதுகிறது. ஏற்கனவே இத்தொகுதி, காங்கிரசின் கோட்டையாக கருதப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத் தேர்தல்களில் பெருவாரியான இடங்களை திமுக கூட்டணி தான் வென்றது.
இந்த நிலையில் நாங்குநேரி தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு கூட கூடிய கூட்டத்தை பார்த்தால், மாநிலம் முழுவதும் வீசிய திமுக ஆதரவு அலை, இங்கும் வீசுகிறதா என்ற ஐயப்பாடு ஆளும் தரப்பிற்கு எழுந்துள்ளது.