முதல்வர் செய்யும் வேலைக்கு... டாக்டர் பட்டம் ஒன்று தான் கேடு -உதயநிதி ஸ்டாலின் கிண்டல்
நெல்லை: டாக்டருக்கு படிக்க வேண்டிய அனிதா போன்ற மாணவிகள் நீட் தேர்வால் உயிரிழக்க காரணமாக இருந்துவிட்டு, இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவுரவ டாக்டர் பட்டம் பெறுவது வேடிக்கையாக உள்ளது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதிஸ்டாலின் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், நிர்வாகம் செய்யத் தெரியாத எடப்பாடி பழனிசாமியால் தமிழகம் சீரழிந்துவருவதாக சாடினார். திமுகவின் இடைத்தேர்தல் வெற்றி என்பது சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கான திமுகவின் முன்னோட்டமாக அமையும் எனத் தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்று நாளை மறுதினம் கவுரவ டாக்டர் வழங்கவுள்ள நிலையில் அது தொடர்பாகவும் பேசினார். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத்தருகிறோம் என வெறும் வாய்சவடால் மட்டும் பேசி, பல மாணவ மாணவிகளின் மருத்துவராகும் கனவைத் தகர்த்தெறிந்தவர் எடப்பாடி பழனிசாமி என குற்றஞ்சாட்டினார்.
அரியலூர் அனிதா போன்ற மாணவிகள் தங்களின் லட்சியமான மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் உயிரிழந்ததற்கு காரணம் தமிழக அரசு தான் எனக் கூறினார். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற எந்த உறுதியான நடவடிக்கைகளையும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., எடுக்கவில்லை என்றும், ஒப்புக்கு தீர்மானம் நிறைவேற்றியதாகவும் சாடினார்.
இப்படி டாக்டருக்கு படிக்க வேண்டிய அனிதா போன்ற மாணவிகள் நீட் தேர்வால் உயிரிழக்க காரணமாக இருந்துவிட்டு, மனசாட்சியே இல்லாமல் டாக்டர் பட்டம் பெறப்போகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எனத் தெரிவித்தார். இது உங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா, இந்தப் பட்டம் உங்களுக்கு தேவையா என முதல்வரை அவர் வினவினார்.