மின்னல் வேகத்தில்.. நேருக்கு நேர் மோதல்.. உட்கார்ந்த நிலையிலேயே பலியான தந்தை, மகள்
நெல்லை: லாரியும், காரும் பயங்கரமாக மோதிக் கொண்டதில், உட்கார்ந்த நிலையிலேயே.. அதிகாரியும், அவரது மகளும் காரில் நசுங்கி உயிரிழந்தனர்!
நெல்லை மாவட்டம் கீழக் கடையத்தை சேர்ந்தவர் மில்டன் ஜெயக்குமார். தீயணைப்புத்துறையில் நிலைய அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ரிடையர் ஆனநிலையில், கடையத்தில் ஒரு ஜவுளிக்கடையை திறக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தார். அதற்கான முயற்சிகளிலும் இறங்கி வந்தார். ஜவுளி ஆர்டர் தருவதற்காக சேலம் செல்ல வேண்டி இருந்தது. இதற்காக தன்னுடைய மகள், ரெனிலா ரோஸை அழைத்து கொண்டு காரில் சேலம் சென்றார். ரெனிலாவுக்கு வயசு 26!
தேவையான ஜவுளியை வாங்கி கொண்டு நேற்று ஊருக்கு தந்தையும், மகளும் வந்து கொண்டிருந்தனர். காரை அப்பாதான் ஓட்டி வந்தார். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு தோட்டக்கலை பண்ணை அருகே கார் சென்றபோது, எதிரே ஒரு லாரி வேகமாக வந்தது.
எதிர்பாராதவிதமாக கார் மீது நேருக்கு நேராக பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்த தந்தை-மகள் உட்கார்ந்த நிலையிலேயே உடல் நசுங்கி உயிரிழந்து விட்டனர். இதில் லாரி டிரைவர் ஜெராசுதீன், காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, தந்தை, மகள் சடலங்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.