நெல்லை சரவணா செல்வரத்தினம் ஸ்டோரில் திடீர் தீ விபத்து!
திருநெலவேலி: நெல்லை சரவணா செல்வரத்தினம் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து, ஜங்ஷன் நோக்கி செல்லக்கூடிய முக்கியமான சாலையில் மேலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது சரவணா செல்வரத்தினம் கடை.
இது மிகவும் போக்குவரத்து அதிகமுள்ள சாலை, மற்றும் இந்த கடைக்கும் தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று இரவு, சரவணா செல்வரத்தினம் கடையின் மேல் பகுதியில், அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்த இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ மளமளவென பரவியது. அதில் வைக்கப்பட்டிருந்த சரவணா செல்வரத்தினம் என்ற பெயர் கொண்ட விளம்பர போர்டு உள்ளிட்டவை தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. இதனால் வாடிக்கையாளர்கள் அவசரமாக வெளியேறினர். அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வைரமுத்து டாக்டர் பட்டம் பெறும் நிகழ்ச்சி ரத்து.. இது சரியில்லை.. மார்க்சிஸ்ட் கடும் கண்டனம்
தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டையில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்ற போதிலும், வாகன நெரிசல் உள்ள ஒரு சாலை பகுதியில், அமைந்துள்ள, கடையில், இந்த தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது லேசான தீ விபத்து தான் என்பதால் பிரச்சனை இல்லை என்று கடை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தால் அந்த சாலையில் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.