குற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்... சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
நெல்லை: நெல்லை மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருவதால் தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளுமையான சூழல் நிலவுகிறது. குற்றாலம் அருவிகளில் நேற்றிரவு முதல் தண்ணீர் வெள்ளமாக கொட்டத் தொடங்கியுள்ளது.
ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் வேகமாக கொட்டுவதால் அங்கும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயினருவி, ஐந்தருவி ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை குறைந்தபின் அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதனையடுத்து, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் பெய்த மழையினால் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் திரண்டு வந்து ஆனந்தமாக குளித்தனர். இந்நிலையில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐந்தருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.