குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்... அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம்
Recommended Video
தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப் பெருக்கு காரணமாக, நேற்று காலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்ட நிலையில், பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது. மெயின் அருவியில் மட்டும் குளிப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டது. ஆனால், இரண்டாவது நாளாக தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால், குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருவதால் தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குளுமையான சூழல் நிலவுகிறது. குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் முதல் வெள்ளமாக கொட்டத் தொடங்கியுள்ளது.
ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வார முறை என்பதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. மெயினருவி, ஐந்தருவி ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை குறைந்தபின் அருவிகளில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இதனையடுத்து, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் பெய்த மழையினால் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வரத் தொடங்கினர். இருப்பினும், குளிக்க தடை விதிக்கப்பட்டதால், ஏமாற்றம் அடைந்தனர்.
இதனிடையே, தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.