இந்த 4 மாவட்டங்களிலும் கன மழை பெய்யும்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
நெல்லை: நெல்லை உட்பட 4 தென் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதை பாருங்கள்: திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இன்றும் நாளையும், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்காசி, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக விட்டு விட்டு மழை பெய்தது. மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதனால் சாலைகள் எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
கடந்த 15 நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
ராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தேனி மாவட்டம், கம்பம் சுற்றுவட்டாரத்தில் திடீரென கனமழை பெய்தது. கம்பம், கூடலூர் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது.