செம ட்விஸ்ட்.. நாங்குநேரி தொகுதியில் ஹரி நாடார் அசத்தல்.. அதிமுக, காங்கிரசுக்கு அடுத்து 3வது இடம்
Recommended Video
நெல்லை: நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் முடிவுகளில் ஒரு ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது. பனங்காட்டு படை கட்சியின், ஹரி நாடார் அபாரமாக 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
நாங்குநேரி சட்டசபைத் தொகுதியில் அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், திமுக கூட்டணி சார்பில், காங்கிரசின் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன் ஆகியோர் போட்டியிட்டனர்.
பொதுவான அரசியல் பார்வையாளர்களின் கருத்து, இந்த மூன்று கட்சிகள் நடுவே மும்முனைப் போட்டி நிலவும் என்பது தான். ஆனால் அங்குதான் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
திமுகவை ஓரம்கட்டி.. அதிமுக செம பெர்பார்மன்ஸ்.. உள்ளாட்சி தேர்தல் சீக்கிரம் வருமா..!
முதல் தேர்தல்
ராக்கெட் ராஜாவை தலைமையாகக் கொண்ட பனங்காட்டு படை என்ற கட்சி முதல் முறையாக இந்த தேர்தலில் போட்டியிட்டது. கட்சியின் சார்பில், அதன், ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் களமிறக்கப்பட்டார். நீண்ட முடி, கழுத்தில் தங்க நகைகள் என அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா உடன் எப்போதும் காணப்பட்ட அதே ஹரி நாடார் தான் இவர்.
முதல் தேர்தலிலேயே மூன்றாவது இடம்
களமிறங்கிய முதல் தேர்தலிலேயே மூன்றாவது இடம் பிடித்த அசத்தியுள்ளார் ஹரிநாடார். அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 95360 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 61913 வாக்குகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் இரண்டாவது இடத்தை பிடித்தார். 4242 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார் ஹரிநாடார். இவர் பனங்காட்டு படை கட்சியை சேர்ந்தவர் என்றாலும், இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் சுயச்சை என்றுதான் தேர்தல் ஆணையம் அவரை அடையாளப்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர், ராஜநாராயணன் 3488 வாக்குகளை பெற்று நான்காவது இடத்தைதான் பிடிக்க முடிந்துள்ளது.
காங்கிரஸ் வாக்குகள் அறுவடை
நாங்குநேரி தொகுதியில் நாடார்கள் பெரும்பான்மையாக உள்ளனர். பெரும்பாலும் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது காங்கிரஸ் எந்த கூட்டணியில் உள்ளதோ அந்த கட்சிக்கு தான் வாக்களிப்பது வழக்கம். ஆனால் அந்த நாடார் வாக்குகளை பனங்காட்டு படை ஓரளவுக்கு தங்கள் பக்கம் திரும்பி உள்ளது என்பதை ஹரிநாடார் பெற்றுள்ள இந்த வாக்குகள் சொல்லக்கூடிய சேதியாக இருக்கிறது. இதுவும் காங்கிரசின் பின்னடைவுக்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
செல்வாக்கு
ஹரி நாடார் தமிழ் தேர்தல் பிரச்சாரத்தின்போது ரோல்ஸ்ராய்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்ட சொகுசு கார்களில் சென்று பிரச்சார பயணத்தை செய்தார். தொகுதி மக்கள் மத்தியில் தன்னை ஒரு பணக்கார செல்வாக்குள்ள வேட்பாளராகத்தான் அவர் காட்டிக் கொண்டார். ஒருவேளை மக்களுடன் இன்னும் இறங்கி பழகினால் இதைவிட அதிக வாக்குகளை பெற்றிருக்க முடியும் என்ற சூழ்நிலை அங்கு உள்ளது. இதை பனங்காட்டுப்படை இனி வரும் காலங்களில், கருத்தில் எடுக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
தென் தமிழகம்
நாங்குநேரி மட்டுமின்றி, ராதாபுரம், சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் சில தொகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில தொகுதிகளிலும் பனங்காட்டு படை கட்சி வாக்குகளை பிரித்து எடுக்கும் சக்தியாக உருமாறும் வாய்ப்பு இருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளன என்று தான் சொல்ல வேண்டும்.