சபாஷ்! லத்திக்கு பதிலாக துடைப்பம்.. ஆபத்து வராமல் காப்பாற்றிய நெல்லை ஏட்டு.. குவியும் பாராட்டு
நெல்லை: நெல்லை மாவட்டம் பணகுடி அருகே சாலையில் சிதறிக் கிடந்த ஜல்லி கற்களை துடைப்பத்தை வைத்து பெருக்கிய தலைமை காவலர் ஜெகதீஷை காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர்
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல்கிணறு வடக்கன்குளம் இடையேயான சாலையில் ஒரு பகுதியில் மட்டும் ஜல்லி கற்கள் குவியலாக சிதறிக் கிடந்தது இதனை கடந்து சென்ற இரண்டு பேர் தடுமாறிக் கீழே விழுந்துள்ளனர்.
இந்த நிலையில் ரோந்து பணியின்போது இதனை அறிந்த பணகுடி காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் ஜெகதீஸ் உடனடியாக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துடைப்பத்தை வாங்கிக்கொண்டு தானே கற்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
சாலையில் செல்லும் வேறு யாரும் கீழே விழுந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு தன்னலமற்ற தலைமை காவலரின் இந்தப் பணியை நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமை காவலர் ஜெகதீசன் வரவழைத்து பாராட்டி நற்சான்று வழங்கி உள்ளார். அதேபோல அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் தலைமைக் காவலரை பாராட்டி வருகின்றனர்.