கொட்டித்தீர்த்த மழை... ஆறுகளில் வெள்ளம் - திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் தவிப்பு
மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை பத்திரமாக தியணைப்புத்துறையினர் மீட்டனர்.
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர். தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் தவித்த பக்தர்களை தீயணைப்பு துறையினர்,வனத்துறையினர் , காவலர்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.
நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் திருமலைநம்பி கோயில் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்தது ஆகும். ஏழைகளின் திருப்பதி என்றழைக்கப்படும் திருமலைநம்பி கோயில், திருக்குறுங்குடியில் இருந்து 8 கி.மீ தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது.
இதில் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து கோயிலுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் 4 கிமீ தூரம் பக்தர்கள் நடந்து சென்று வருகின்றனர். பிரசித்திப் பெற்ற இந்த கோயிலில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த கோயிலுக்கு வந்து நம்பி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 2ம் கட்ட கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி மூடப்பட்ட திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயில் ஜூலை 9ம் தேதி திறக்கப்பட்டது. கடும் நிபந்தனைகளுடன் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
களக்காடு மலையில் பற்றிய காட்டுத் தீயினால் இடம் பெயர்ந்த யானைகள், நம்பி கோயில் சாலையில் உலா வந்தததையடுத்து ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மீண்டும் மூடப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் பக்தர்கள் பெருமாளை தரிசிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.
மலையில் கோயில் கொண்டிருக்கும் நம்பி ரிஷிகேசனாக மலைமேல் நம்பி என்று அழைக்கப்படுகிறார். மொத்தம் 5 வடிவங்களில் பெருமாள் அருள்பாலிக்கும் தலம் இது. அரசு உத்தரவினை அடுத்து நேற்று முதல் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான இன்று ஏராளமான பக்தர்கள் நம்பி கோவிலுக்கு சென்று வழிபட்டனர். அழகிய நம்பிராயர் கோயிலில் பல சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் காரணமாக மலை நம்பிக் கோவிலுக்கு செல்லும் வழியில் இருந்த தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் பக்தர்கள் கீழே வரமுடியாமல் மலையில் சிக்கினர். தகவல் அறிந்ததும், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு பக்தர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.