சங்கரன்கோவிலில் விடிய விடிய வெளுத்தெடுத்த மழை.. கிடுகிடுவென நிரம்பிய குளம், கண்மாய்கள்!
Recommended Video
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியதை அடுத்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நீரின்றி வறண்டு காணப்பட்டது. அத்துடன் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.
சங்கரன்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் சில தினங்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் குளங்களுக்கு ஓரளவு தண்ணீர் வந்தது. இதனால் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்வதற்கான பணியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினர்.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சங்கரன்கோவில், திருவேங்கடம், தேவர்குளம், குருவிகுளம், செவல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஒடியதுடன், குளங்கள், கண்மாய்களில் தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது.
சங்கரன்கோவில் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் - பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.