"நைட்" வந்தாலே கிரேசியாவுக்கு செம குஷிதான்.. உள்ளே இருந்து கொண்டே.. உறைந்து போன நெல்லை!
பைக்கை திருடிய பெண் போலீஸ் கைது செய்யப்பட்டார்
நெல்லை: கிரேசியா செய்த காரியத்தை பார்த்தீங்களா.. எவ்ளோ துணிச்சல்? ஸ்டேஷனுக்குள் இருந்து கொண்டே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் இந்த பெண் போலீஸ்.. ஊரெல்லாம் இதேதான் பேச்சாக இருக்கிறது!
பொதுவாக, கைது குற்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் பிடிபடும்போது, அதில் சம்பந்தப்பட்ட வண்டிகளையும் போலீஸார் பறிமுதல் செய்வது வழக்கம்.. அப்படி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை கொண்டு போய் முதலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுவார்கள்.
அதற்கு பிறகு தங்களது ஸ்டேஷன் வாசலில் அல்லது வளாகத்தில் எடுத்து வந்து நிறுத்திவிடுவார்கள். இதுபோன்ற வண்டிகளில் ஏதாவது காஸ்ட்லியாக இருந்தால், அதில் இருந்து உதிரிபாகங்களை லவட்டி கொள்வதும் அடிக்கடி நடக்கக்கூடிய நிகழ்வு.. அந்த குற்றவாளிகளையும் போலீசாரே கண்டுபிடித்து உள்ளே தள்ளுவார்கள்.
செல்போன்
இப்போதும் அப்படித்தான் ஒரு சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.. கூடங்குளம் ஸ்டேஷனில் மதன்ராஜ் என்பவர் ஒரு புகார் கொண்டு வந்தார்.. அந்த புகாரில், "என்னுடைய செல்போனையும், பைக்கையும் போலீசார் ஒப்படைக்கப்படவில்லை.. இதை பற்றி பலமுறை கேட்டும் சரியாக பதில் சொல்வதும் இல்லை.. இழுத்தடிக்கிறார்கள்.. அதனால், என்னுடைய பைக்கும், செல்போனும் பெற்று தர வேண்டும்" என்று நெல்லை மாவட்ட எஸ்.பி. மணிவண்ணனுக்கு அந்த புகாரை மதன்ராஜ் எழுதியிருந்தார்.
புகார் மனு
எஸ்பி-க்கே புகார் மனு வந்துவிட்ட நிலையில் விசாரணையும் துரிதமானது.. அப்போதுதான், அந்த ஸ்டேஷனில் திருட்டு நடக்கும்போது மட்டும் சிசிடிவி கேமிரா ஆஃப் ஆகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.. ஒவ்வொரு முறை திருட்டு நடக்கும்போதெல்லாம், இந்த கேமிராவின் ஸ்விட்ச் அணைக்கப்பட்டிருக்கிறது.. இதுதான் போலீசுக்கு அடுத்த சிக்கலை உருவாக்கியது.. அதனால், குற்றவாளியை கண்டுபிடிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இருந்தாலும், போலீசார் தங்கள் விசாரணையை விரிவுபடுத்தினர்.. போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரிடமும் தனித்தனியாக துருவி துருவி விசாரித்தனர்.
சிக்கினார்
அப்போதுதான், கிரேசியா சிக்கினார்.. வயது 29 ஆகிறது.. அவர்தான் அந்த ஸ்டேஷனில் பெண் போலீஸாக வேலை பார்ப்பவர்.. இரண்டாம்நிலைப் பெண் காவலர்.. இவர்தான் அந்த திருட்டில் ஈடுபட்டவர்.. நைட் டியூட்டி என்றால் போதும், கிரேசியாவுக்கு கொண்டாட்டம்தான்.. உடனே தன் கணவர் அன்புமணிக்கு போன் செய்து வரவழைப்பாராம்.. ஸ்டேஷனில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும் வண்டிகளை அவர் உதவியுடன் திருடி சென்று வந்துள்ளார்.
பறிமுதல்
இப்போதைக்கு கிரேசியாவிடம் இருந்து 3 பைக்குகள், ஒரு செல்போன், வெள்ளி அரைஞாண் கயிறு போன்றவற்றை போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். மேலும் இந்த ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.. பெண் போலீஸ் ஒருவர் ஸ்டேஷனிலேயே வண்டிகளை திருடியதும், அந்த வண்டிகளை கடத்தி கொண்டு போய் விற்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது... எல்லாம் சரி, அந்த அரைஞாண் கயிறு எப்படி?