துண்டு சீட்டு வைத்து பேசறீங்கன்னு பாஜக கேலி செய்யுதே.. அதைப் பற்றி கவலை இல்லை.. ஸ்டாலின் பொளேர்!
நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முக ஸ்டாலினிடம், துண்டு சீட்டு வைத்துபேசுவதாக பாஜக விமர்சனம் செய்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரரும் மன்னருமான பூலித்தேவனின் படைத்தளபதியாக இருந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன். இவர் 1767ம் ஆண்டு பெரும்படையுடன் வந்த ஆங்கிலேய தளபதி கர்னல் ஹெரானை எதிர்த்து மிகக் குறைவான வீரர்களுடன் சென்று போரிட்டு வென்றார்.
அப்படிப்பட்ட மாவீரன் ஒண்டிவீரனின் 248வது நினைவு நாள் இன்று அணுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நெல்லை பாளையங்கோட்டையில் சமாதானபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் ஒண்டிவீரனின் திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முக ஸ்டாலின், 2011ம் ஆண்டிலிருந்து தற்போது வரை மூன்று முறை பால் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. பால் வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த அரசு முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
துண்டு சீட்டு வைத்துபேசுவதாக பாஜக விமர்சனம் செய்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முக ஸ்டாலின், இது போன்ற விமர்சனங்களை பற்றி நான் கவலைப்படவில்லை என்று தெரிவித்தார்.