இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அணி மாற தயார்... தங்கதமிழ்செல்வன் பளீச்
இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அவர்களுடன் இணைந்து கொள்வதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
நெல்லை: இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அவர்களுடன் இணைந்து கொள்வதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
அதிமுக இரண்டு அணிகளாக உடைந்து தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது. அதே நேரம், தங்களது அணியில் இணையுமாறு, அதிமுகவும், அமமுகவும் மாறி, மாறி அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதிய தலைமையை தமிழ்நாடு எதிர்பார்க்கிறது. அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.
பாஜகவுடன் அ.ம.மு.க. கூட்டணி கிடையாது என்றார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி திருந்தி எங்களுடன் வந்து சேரவேண்டும். இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், நாங்கள் அதிமுகவிற்கு வருகிறோம், நாங்கள் வெற்றி பெற்றால் அதிமுகவினர், அமமுக-விற்கு வரட்டும் என்றும் கூறினார்.
முன்னதாக, அதிமுகவில் இணையுமாறு அழைப்பு விடுத்த, அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அ.தி.மு.க.வில் இணைவதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து விடலாம் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.