திமுகவில் இணைந்த அந்த 537 பேர்... ஒர்க் அவுட் ஆன அய்யாதுரை பாண்டியன் வியூகம்.. பாராட்டிய ஸ்டாலின்..!
தென்காசி: எந்தக் கட்சியையும் சேராத முதல்முறை வாக்காளர்கள் 537 பேரை திமுகவில் இணைய வைத்து ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பிடித்திருக்கிறார் அக்கட்சியின் வர்த்தகர் அணி நிர்வாகி அய்யாதுரை பாண்டியன்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற முழக்கத்தோடு தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஸ்டாலின், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு சென்றார். அங்கு ஐ பேக் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர் தரப்பிலிருந்து பொதுமக்களிடம் மனு பெறும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுமார் 2 மணி நேரம் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலின், அதன் பின்னர் திமுக வர்த்தகர் அணி துணை செயலாளர் அய்யாதுரை பாண்டியன் நடத்திய மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் கலந்துகொண்டார்.
அங்கு கூடியிருந்த 1,522 பேரில் 537 பேர் முதல்முறை வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக மாற்றுக்கட்சியிலிருந்து திமுகவில் இணையும் நிகழ்ச்சி என்றால் 50 வயதை கடந்தவர்கள் தான் அதிகம் இருப்பார்கள். ஆனால் அய்யாதுரை பாண்டியன் நடத்திய இந்த நிகழ்ச்சியில், பாதிக்கு பாதி அதாவது 700 பேர் வரை 18-ல் இருந்து 30 வயதிற்குட்பட்டவர்கள்.
தென்காசி மாவட்டத்தில் மினி கிளினிக்கிற்கு செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் தேவை
இவர்கள் அனைவரும் சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, வாசுதேவநல்லூர், ஆலங்குளம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்தவர்கள். அய்யாதுரை பாண்டியனை பொறுத்தவரை கபடி போட்டி, கிரிக்கெட் போட்டி, என இளைஞர்கள் நடத்தும் அனைத்து போட்டிகளிலும் தவறாமல் ஆஜராகி அவர்களை ஊக்கப்படுத்தக்கூடியவர்.
அந்தவகையில் 36 கபடி குழுக்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கிரிக்கெட் போட்டி குழுவினர் என இதன் மூலம் மட்டும் 537 முதல்முறை வாக்காளர்களை திமுகவுக்கு வளைத்து கொண்டு சென்றிருக்கிறார். திமுகவில் இணைந்த மீதம் 1000 பேர்களில் அதிமுகவை சேர்ந்தவர்கள் 382 பேர் என்பதும் அமமுகவை சேர்ந்தவர்கள் 160 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் ஓரளவு வாக்குவங்கியை கொண்டுள்ள புதிய தமிழகம் கட்சியிலிருந்து 205 பேரை திமுகவுக்கு அழைத்துச்சென்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அய்யாதுரை பாண்டியன்.